திருநெல்வேலியின் புகழ் பெற்ற கோவில் நெல்லையப்பர் கோவில் ஆகும். இது சுற்றளவில் மிகப் பெரியது.
நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை
திருநெல்வேலியின் புகழ் பெற்ற கோவில் நெல்லையப்பர் கோவில்
ஆகும். இது சுற்றளவில் மிகப் பெரியது.
நெல்லையப்பர் கோவில் ஏராளமான குளங்களுடன் பெரிய அளவில்
முன்பு இருந்திருக்கிறது. ஆனால், காலப் போக்கில் அந்தக் குளங்கள் தூர்க்கப்பட்டு,
அவற்றை யார் யாரோ ஆக்கிரமித்து விட்டனர். அந்த இடங்களில்
எல்லாம் இப்போது கடைகள் வந்து விட்டன.
வெளி பிரகாரத்தில் மட்டும் கலைநயம் மிக்க சிலைகள் உள்ளன.
உள்ளே முழுக்க முழுக்க அனைவரும் காணக்கூடிய அளவில் தான் இருக்கிறது. ஒரு யானை
இன்னொரு யானையைக் கூட்டிச் செல்லும் காட்சி, சிவனுக்குக் கண் தந்த கண்ணப்ப நாயனார் சிலை,
மல்யுத்த வீரன் சிலை ஆகியவை நம்மை ஈர்த்தன.
நாயக்கர்கள் ஒரு காலத்தில் இந்தப் பகுதியை ஆண்டபோது,
கடவுள் சிலைகளிலும் தங்கள் கடவுளை முன்னிறுத்தி,
சில மாறுதல்கள் செய்து விட்டனர் எனச் சொல்லப்படுகிறது.
கோவிலில் நெல்லையப்பர் அருகிலிருக்கும் நெல்லை கோவிந்தர்,
படுத்த வண்ணம் அழகாய்க் காட்சி தருகிறார். அவர் சற்று உயரம்
குறைவானவர். கோவில் தஞ்சைப் பெரிய கோவிலை விடவும் அளவில் பெரியது என்றும்,
கட்டி முடித்து 1860 ஆண்டுகள் ஆகிறது என்றும் சொல்கிறார்கள்
இங்குள்ள சகஸ்ரலிங்கம் - ஒரு பெரிய லிங்கத்தினுள் 1008 சிறிய லிங்கங்கள் கொண்டது. (காஞ்சியில் ஒரு கோவிலிலும் இதே
போல் பார்த்த நினைவு)
இங்குள்ள பார்வதி அம்மன் பெயர் காந்திமதி அம்மன். இந்த
ஏரியாவில் உள்ள பெண்களில் பலருக்கும் இப்பெயர் உண்டு.
கோவிலின் உள்ளேயே ஒரு அழகான கோவில் குளம் உள்ளது. அது
அற்புதமாகப் பராமரிக்கப்படுகிறது.
மீன்வளத்துறை, குளத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்து,
இங்கு நிறைய மீன்களை விட்டு, வளர்த்து வருகிறது
அடுத்து நாம் சென்ற இடம் தாமிர சபை. சமீபத்தில் தான் 70 லட்சம் செலவில் அது சீரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.
தாமிரசபையில் அமர்ந்து தியானம் செய்வோர் பலர். இங்கு மனம் ஒருநிலைப்படுதலை உணர
முடியும் என்கிறார்கள்.
அம்மனுக்கு ஏராளமான நகைகள் உண்டு போலும். அது இருக்கும்
இடத்தில் வெளியே எந்நேரமும் ஒரு போலீஸ் காவல் காக்கிறார்.
1000 கால்
மண்டபம் ஒன்று நம்மை ஈர்க்கிறது. அங்கு எப்போதும் ஏதாவது கலாட்சேபம் நடக்குமாம்.
குறிப்பாகத் திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் வகுப்பினருக்கு இக்கோவில் மிக
முக்கியமான ஒன்று என்றும், அவர்கள் அடிக்கடி இங்குக் கூடி கலாட்சேபம் செய்வார்கள்
என்றும் கூறினார்கள். கோவிலுக்குள் இருக்கும் மற்றொரு இடம் - நந்தவனம். இங்கு ஏராள
மரங்கள் உள்ளன. கோவிலுக்குத் தேவையான பாலுக்காகச் சில மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
இந்தக் கோவிலை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக் கொள்ள
நெல்லைநகர பொதுமக்களே உதவுகிறார்கள். ஒவ்வொரு நான்காவது ஞாயிறன்றும் 400 முதல் 500 பொது மக்கள் கோவிலுக்கு வந்திருந்து,
கோவிலை முழுமையாய்க் கழுவி விடுகிறார்கள். கோவில் வேலை
செய்த திருப்தி அவர்களுக்கும் கிடைத்த மாதிரி ஆயிற்று. கோவிலும் சுத்தமாய் உள்ளது.
இத்தகைய பெரிய கோவில்களில் எத்தனை பேரின் உழைப்பும் தியாகமும் உள்ளன. அந்த
கோவிலைச் சுற்றி பல்வேறு கதைகளும் உள்ளன!
கோவிலைத் தினம் ஒரு முறை முழுதாய்ச் சுற்றி
வந்தால் வேறு உடற்பயிற்சியே தேவையில்லை!
நெல்லை சென்றால் அவசியம்
சென்று வாருங்கள். நெல்லையப்பரைத் தரிசிக்க!
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
ஆன்மீகம்: சிவன் : நெல்லையப்பர் கோவில் ஒரு பார்வை - குறிப்புகள் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : A view of the Nellaipar temple - Notes in Tamil [ spirituality ]