ஆஞ்சநேயர் வழிபாடு - 10 வகைகள்

வெண்ணைக்காப்பு, வடைமாலை, சிந்தூரக் காப்பு, அனுமார் வால், துளசிமாலை

[ ஆன்மீகம்: ஆஞ்சநேயர் ]

Anjaneya worship - 10 types - Vennaikappu, Vadaimalai, Sindoorkapapu, Anumar Val, Tulsimalai in Tamil



எழுது: சாமி | தேதி : 01-06-2023 01:12 pm
ஆஞ்சநேயர் வழிபாடு - 10 வகைகள்  | Anjaneya worship - 10 types

இராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம். ஆகவே இராமநாம் பஜனை செய்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

ஆஞ்சநேயர் வழிபாடு - 10 வகைகள் 


1. இராமநாம உச்சரிப்பு வழிபாடு

இராமர் பெயரை மனதில் சொல்லி வணங்குவதே ஆஞ்சநேயருக்கு மிகுந்த விருப்பம். ஆகவே இராமநாம் பஜனை செய்து வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.

 

2. வெண்ணைக்காப்பு வழிபாடு

இராவண சம்ஹாரத்திற்குப் பிறகு இரண்டு அசுரர்கள் தப்பி ஓடி தவம் செய்து வரங்களைப் பெற்று, தேவர்களை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தேவர்கள் பயந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களைச் சம்ஹாரம் பண்ணக் கூடியவர்களை அனுப்ப வேண்டும் என்று கலந்து ஆலோசித்த போது, அனுமன் கடவுளே அதற்குத் தகுதியானவர் என்று முடிவு பண்ணி, அவரை அனுப்ப ஏற்பாடு செய்தனர். அனுமனுக்குப் போரில் உதவ ஒவ்வொரு கடவுளும் அவருக்கு உரிய ஆயுதங்களை ஆசீர்வாதம் பண்ணி அளித்தார்கள்.

ஸ்ரீராமர் வில்லையும், பிரம்மாவும், சிவபெருமானும் இன்னும் மற்றக் கடவுள்களும் சக்தி வாய்ந்த மற்ற ஆயுதங்களையும் அளித்தார்கள். ஸ்ரீ கண்ணபெருமான் வெண்ணையை அளித்து 'இந்த வெண்ணை உருகுவதற்குள் உனது காரியம் வெற்றியடையும், அசுரர்களையும் அழித்து விடலாம்' என்று சொல்லி ஆசீர்வதித்தார்கள்.

அதன்படி அனுமன் கையில் ஆசீர்வாதமாக அளிக்கப்பட்ட வெண்ணை உருகுவதற்குள், இரண்டு அசுரர்களையும் போரில் சந்தித்து வெற்றி பெற்று அவர்களை அழித்து ஆகவே அதே போல நாம் வெண்ணை சாத்தி வழிபட்டால், நாம் சாத்திய வெண்ணை உருகுவதற்குள் நாம் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.

 

3. வெற்றிலை மாலை சாத்தி வழிபாடு

சீதாவை அனுமார் அசோக வனத்தில் சந்தித்தபோது வெற்றிலையை எடுத்து, அவருடைய தலை உச்சியில் வைத்து 'சிரஞ்சீவியாக வாழ்வாயாக' என்று சீதா பிராட்டியார் ஆசீர்வதித்தார். ஆகவே வெற்றிலை ஆஞ்சநேயர் மிகவும் விரும்பும் பொருளாயிற்று. ஆகவே வெற்றிலை மாலையாகத் தொடுத்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலைமாலை சாத்தி வழிபடலாம்.

 

4. வடைமாலை வழிபாடு

உளுந்து தானியத்தில் உடலின் களைப்பு தீர்க்கும் சக்தியும், ஊட்டச்சத்தும் உள்ளது. இராம கைங்கரியத்திலேயே சதா ஈடுபாட்டுடன் இருந்து வருபவரும், ஓயாமல் உழைத்து வருபவருமான ஆஞ்சநேயருக்கு உணவருந்தவே அவகாசம் கிடைக்கவில்லை.

ஆதலால் அனுமானின்தாய் அஞ்சனாதேவி, தன் மகனுக்கு வடை ஒன்றை அளித்து அவரது களைப்பைப் போக்கினாள். ஒரு வடை சாப்பிட்டால் ஒரு நாள் முழுவதும் உணவு உட்கொள்ள வேண்டாம். களைப்பில்லாமல் இருக்கலாம். ஆகவே தான் வடைமாலை சாத்தும் கைங்கரியம் செய்யப்படுகிறது. அனுமார் இராவணப் படையுடன் செய்த போர்களில் உடல் முழுவதும் துளைகள் உண்டாகி விட்டன.

ஆனால் துளைகளை அனுமாரின் மருத்துவ சக்தியினால் குணம் அடையச் செய்து விட்டார். ஆகவே துளை போட்ட வடைகளை மாலையாக்கி, வடைமாலை சாத்துகிறோம். என்றொரு ஐதீகம் உள்ளது.

 

5. வாலிற்குச் சந்தனப் பொட்டு குங்குமத் திலகம் அணிந்து வழிபாடு

ஆஞ்சநேயப் பெருமான் வலிமை முழுவதும். அவருடைய வாலில் இருப்பதாகப் பக்தர்கள் நம்புகிறார்கள். இதற்கு ஒரு வரலாறு உள்ளது. பீமன் பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்த போது மிகவும் களைப்படைந்து விட்டார். குறுக்கே குரங்கு வால் ஒன்று தென்பட்டது.

அதை நகர்த்துமாறு குரங்கைக் கேட்டார். படுத்திருப்பது ஆஞ்சநேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுகோளை வேகமாகச் சொல்லிக் கோபப்பட்டார். உடனே அனுமார் 'வயோதிகத்தினால் என்னால் என் வாலை நகர்த்த முடியவில்லை. நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்தி விடு' என்று சொன்னார். பீமர் வாலை அப்புறப்படுத்த முயற்சி செய்தார்.

பலமுறை முயன்றும் முடியவில்லை. அப்போது ஆஞ்சநேயர், தான் வாயுபுத்திரன் என்று அறிமுகப்படுத்தி வாலைத் தானே நகர்த்தி பீமன் போவதற்கு வழிகொடுத்து வாழ்த்தினார். தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை, இவ்வளவு சுலபமாகச் செய்து விட்டாரே என்று ஆச்சரியப்பட்டு பீமன் அனுமனையும், அனுமன் வாலையும் வணங்கினார்.

பீமன் ஆஞ்சநேயரைப் பார்த்து உங்கள் வாலின் வலிமையையும், மகிமையையும் தெரியாமல் உதாசினப்படுத்திய என்னை மன்னித்து, எனக்கு சர்வ சக்திகளையும், மங்களத்தையும் அளித்தீர்களே! அதே போல உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும். சர்வ மங்களத்தையும் கொடுத்து அருள வேண்டும் என்று வணங்கி வரம் அளிக்கக் கேட்டுக் கொண்டார்.

அப்படியே அனுமாரும் வரம் அளித்தார். இந்த வரலாற்றை ஒட்டியே இந்த வழிபாட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த வழிபாட்டு செயல்முறை வருமாறு:~

அனுமாருடைய உடலில் வால் ஆரம்பமாகும் பகுதியிலிருந்து ஆரம்பித்து, தினசரி முதலில் சந்தனப் பொட்டு வைத்து, அந்த சந்தனப் பொட்டின் மேல் குங்குமத் திலகம் இட்டுவர வேண்டும். ஒவ்வொரு நாளும் இம்மாதிரி தொடர்ந்து வைத்துக் கொண்டே வந்து வாலின், நுனி வரை முடிக்க வேண்டும்.

அப்படி முடிக்கிற நாளன்று ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்திப் பூஜை செய்ய வேண்டும். அப்போது ஆஞ்சநேயர் நாமத்தையும், இராம நாமத்தையும் ஜெபிக்க வேண்டும். அப்படிச் செய்தால் நினைத்த காரியம் பலித்துப் பூரண பலனும், பெரும்பேறும் கைகூடும்.

 

6. சிந்தூரக் காப்பு வழிபாடு

அசோக வனத்தில் அனுமன் சீதாவைப் பார்த்த போது, அவர் மிகவும் சோகமாகக் காணப்பட்டார். அப்போது அனுமான் பல விளக்கங்களை நேரில் சொல்லி இராமபிரான் சுகமாகவும், பத்திரமாகவும் இருப்பதாகவும், சீதா பிராட்டியாரின் நினைவாகவே இருப்பதாகவும் சீதா பிராட்டியாரைத் தேடித்தான் அலைந்து கொண்டு இருக்கிறார் என்ற நல்ல செய்திகளையும் சொன்னார்.

இச்செய்திகளைக் கேட்டதும் சீதா மகிழ்ச்சி அடைந்து கீழே இருந்த சிந்தூரப் பொடியை எடுத்து நெற்றியில் அணிந்து கொண்டார். இராமபிரான் மங்களகரமாகவும். பத்திரமாகவும் இருப்பதன் சின்னமாகச் சிந்தூரப்பொடி அணிந்து கொண்டார்.

உடனே அனுமாரும் ஸ்ரீராமபிரான் சகல மங்களங்களுடன் இருப்பதற்காகத் தானும் உடனே அங்கிருந்த சிந்தூரப் பொடியை எடுத்து, உடம்பு முழுவதும் பூசிக் கொண்டார். இதனால் தான் நாம் அனுமாருக்குச் சிந்தூரம் அணிவிக்கிறோம். நமது நெற்றியில் சிந்தூரப் பொட்டு அணிந்து கொள்கிறோம்.

 

7. அனுமார் வால் வழிபாடு

இராமனுக்கு உதவி செய்ய வேண்டும் எனச் சிவபெருமான் நினைத்தார். இதனால் சிவபெருமானே ஆஞ்சநேய உருவம் எடுத்தார். அப்போது பார்வதி தேவி நீங்கள் மட்டும் தனியாகப் போகக்கூடாது. என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.

நான் உங்களைவிட்டு எப்படிப் பிரிந்திருப்பேன் என்றார். உடனே சிவபெருமான் அப்படியானால் 'நீ எனது வாலினுள் புகுந்துவா' என்றார். அதன்படி அனுமானுடைய வாலாகப் பார்வதி தேவி உருப்பெற்றார். ஆகவேதான் அனுமான் வாலில் சக்தி ரூபம் மறைந்து இருப்பதால், அனுமன் வாலை, கல்யாணம் ஆகாத கன்னிப் பெண்கள் வணங்கி மண வாழ்க்கை பெறப் பிரார்த்திக்கின்றார்கள்.

அனுமன் வாலை வணங்குவது, பார்வதி தேவியை வணங்குவதற்குச் சமமாகும். ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதாக மற்றொரு ஐதீகம் உள்ளது. ஆதலால் ஆஞ்சநேயரின் வாலின் நுனியில் சந்தனம், குங்குமம் பொட்டிட்டு ஒரு மண்டல காலம், அதாவது 48 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை செய்து வணங்கி வருவது, நவக்கிரகங்களை ஒரு சேர வணங்குவதற்கு ஒப்பாகும்.

 

8. துளசிமாலை வழிபாடு

துளசி இலை மருத்துவ சக்தி படைத்தது. நோய்களை விரட்டும் ஆற்றல் பெற்றது. ஆகவே துளசி இலைகளை மாலையாகத் தொடுத்து, ஆஞ்சநேயருக்குச் சாற்றி வணங்குகிறோம்.

 

9. பழமாலை வழிபாடு

பழங்களை மாலையாகத் தொடுத்து சாற்றிவணங்குவதும் சிறப்பான வழிபாடாகும். எலுமிச்சம்பழம், வாழைப்பழம், கொய்யாப் பழம், அன்னாசிப்பழம் மற்றும் பழங்களின் மாலை சாற்றி வழிபட்டால் நல்ல பலன்கள் உண்டாகும்.

 

10. படங்கள் வழிபாடு

ஆஞ்சநேயர் உருவம் கொண்ட படத்தை வீட்டிலேயே வைத்துப் பூஜை செய்யலாம். வேண்டுதல்களைச் சமர்ப் பிக்கலாம். இது ஆத்ம திருப்தியுடன் கூடிய ஆற்றல்களைத் தரும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: ஆஞ்சநேயர் : ஆஞ்சநேயர் வழிபாடு - 10 வகைகள் - வெண்ணைக்காப்பு, வடைமாலை, சிந்தூரக் காப்பு, அனுமார் வால், துளசிமாலை [ ஆன்மீகம் ] | spirituality: Anjaneya : Anjaneya worship - 10 types - Vennaikappu, Vadaimalai, Sindoorkapapu, Anumar Val, Tulsimalai in Tamil [ spirituality ]



எழுது: சாமி | தேதி : 06-01-2023 01:12 pm