ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்

சமயபுரம் மாரியம்மன், கொல்லூர் மூகாம்பிகை, புன்னை நல்லூர் மாரியம்மன், திருக்கடையூர் அபிராமி

[ அம்மன்: வரலாறு ]

Blissful Goddess Darshan - Samayapuram Mariamman, Kollur Mookambikai, Punnai Nallur Mariamman, Thirukkadaiyur Abhirami in Tamil

ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம் | Blissful Goddess Darshan

அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை.

ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம்!

 

சமயபுரம் மாரியம்மன்:

அம்மனை வேண்டி பக்தர்கள் விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால், இந்த அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருக்கிறாள். அந்நியப் படையெடுப்புக்கு அஞ்சிய விஜய நகர பக்தர்கள், இந்த அன்னையை சமயபுரத்திற்கு பல்லக்கில் வைத்து தூக்கி வந்தனர். இன்றைய சமயபுரத்தில் சிலையை வைத்து விட்டு, களைப்பு நீங்கி மீண்டும் தூக்கும்போது, அவர்களால் அதைத் தூக்க முடியவில்லை!. அங்கேயே அன்னை உறுதியாக அமர்ந்து விட்டாள்!. பின்பு, அந்த இடத்திலேயே சிலையைப் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது. பக்தர்கள் நினைத்த காரியங்களை நிறைவேற்றும் இந்த அம்மன், கண்ணொளி வரம் தருவது தனிச் சிறப்பு மிக்கது!

 

கொல்லூர் மூகாம்பிகை:

சங்கு சக்கரதாரிணியாகக் காட்சியளிக்கும் இந்த அன்னை மூகாம்பிகை சக்தி மிக்கவள். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சுயம்பு ஜோதிர்லிங்கம் இங்கு உள்ளது. கிழக்கு வாசலில் உள்ள வீரபத்திரர் இத்தலத்தைக் காவல் புரிகின்றார். கருவறை விமானம் முழுவதும் தங்கத் தகட்டால் வேயப்பட்டுள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம் அர்த்தநாரி பீடம். பக்தர்களுக்கு அர்த்த ஜாமத்தில் நடைபெறும் பூஜையில் கஷாயம் நிவேதனமாக வழங்கப்படுகிறது

 

புன்னை நல்லூர் மாரியம்மன்:

புற்றுமண்ணால் உருவான மாரியம்மன் இவள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த அம்மனுக்கு தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும். அப்போது தேவியின் உக்கிரம் அதிகமாகும். அதைத் தணிக்க இளநீர், தயிர்சாதம், நீர் போன்றவை நிவேதனமாகப் படைக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்பிகை முத்துப்பல்லக்கு வலம் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்/.

 

பட்டீஸ்வரம் துர்க்கை:

சிங்கத்துடன் நின்று அருட்காட்சி தரும் பட்டீஸ்வரம் துர்க்கை, கேட்ட வரம் கேட்டபடியே அருளக் கூடியவள். திருமணம் ஆகாத வர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி, அம்மனை வந்து வணங்கினால் அவர்களுக்கு வெகு விரைவில் திருமணம் கைகூடும்!. தீராத நோயினால் வாடுபவர்கள், குடும்பப் பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள் இந்தத் துர்க்கை அம்மனை வந்து வணங்கினால் நலமும், வளமும் பெறுவது உறுதி.

 

அம்பகரத்தூர் பத்ரகாளி:

ஆடி மாதத்தில் திருவிளக்கு வழிபாடும், செவ்வாய்க் கிழமை தோறும் விசேஷ வழிபாடும் நடைபெறும் கோவில் இது. ஆக்ரோஷமான கோலத்தில் காணப்படும் இங்குள்ள தேவியை வணங்கினால் நம் மனதில் உள்ள அசுர குணங்கள் அழிந்து விடும் என்கிறார்கள். பத்ரகாளி சகல நலன்களையும் அருள்பவள்.

 

சிருங்கேரி சாரதா:

ராவணனைக் கொன்ற தோஷம் நீங்க எடைக்கு எடை எள்ளை ராமனிடம் இருந்து தானமாக வாங்கிய அந்தணர் ஒருவர் பிரம்மராட்சசர் ஆனார். அவரை சிருங்கேரியில் உள்ள சாரதைக்குக் காவல் புரியுமாறு ஆதிசங்கரர் கூறினார். அவர்தான் பிரம்மபட்டா என்ற பெயருடன் காவல் தெய்வமாக இருக்கிறார்!. சிருங்கேரி சாரதாவை வணங்கும் பக்தர்களின் குடும்பம் மிகச் சிறந்து விளங்கும். தீய சக்திகளின் கொட்டம் ஒடுங்கும்!

 

திருக்கடையூர் அபிராமி:

அமாவாசையைப் பவுர்ணமி என்று கூறிய அபிராமிபட்டரின் கூற்றை மெய்ப்பிக்க தன் தடாங்கத்தை வானில் வீசி முழு நிலவை உருவாக்கியவள் இங்குள்ள அபிராமி அன்னை. இந்த அன்னையை வணங்கினால், பதினாறு செல்வங்களையும் பெறலாம். காலனிடம் இருந்து மார்க்கண்டேயனைக் காத்த காலசம்ஹாரமூர்த்தியின் சக்தி வடிவமும் இவள்தான்!

 

திருவானைக்காவல் அகிலாண்டேசுவரி:

சக்தி பீடங்களில் வாராகிபீடம், ஞானபீடம் என்று அழைக்கப் படும் தலம் இது. ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சிவ சக்கரங்கள் அம்மனின் காதுகளை அலங்கரிக்கின்றன. அகிலத்தை மட்டுமா. அண்ட சராசரங்களையும் ஆள்பவள் இவள். நம்பித் தொழுவோரைக் கைவிடாத நங்கை இவள். கேட்ட வரம் தருபவள்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

அம்மன்: வரலாறு : ஆனந்தம் தரும் அம்மன் தரிசனம் - சமயபுரம் மாரியம்மன், கொல்லூர் மூகாம்பிகை, புன்னை நல்லூர் மாரியம்மன், திருக்கடையூர் அபிராமி [ அம்மன் ] | Amman: History : Blissful Goddess Darshan - Samayapuram Mariamman, Kollur Mookambikai, Punnai Nallur Mariamman, Thirukkadaiyur Abhirami in Tamil [ Amman ]