பூனையும் எலியும்

குறிப்புகள்

[ சிந்தனை சிறு கதைகள் ]

Cat and mouse - Tips in Tamil

பூனையும் எலியும் | Cat and mouse

அது ஒரு பெரிய காடு. அங்கே இருந்த பெரிய மரம் ஒன்றில் காட்டுப் பூனை ஒன்று வசித்து வந்தது. அந்த மரத்தினடியில் மண்ணுக்குள் குழிதோண்டி அந்தக் குழிக்குள் ஒரு எலி வசித்து வந்தது.

பூனையும் எலியும்

அது ஒரு பெரிய காடு.

அங்கே இருந்த பெரிய மரம் ஒன்றில் காட்டுப் பூனை ஒன்று வசித்து வந்தது.

அந்த மரத்தினடியில் மண்ணுக்குள் குழிதோண்டி அந்தக் குழிக்குள் ஒரு எலி வசித்து வந்தது.

காட்டுப் பூனைக்கு அந்த எலியைப் பிடித்துத் தின்ன வேண்டுமென்று ஆசை வந்தது.

எலி தனது இருப்பிடமாகிய அந்த வளை (குழி)யிலிருந்து வெளியே வருவதைப் பார்த்திருந்து அதைப் பிடிக்கப் பூனை பல தடவைகள் முயன்றிருக்கிறது.

ஆனால் எலியோ ஒவ்வொரு தடவையும் பெருஞ்சிரமப்பட்டுத் தப்பித்து ஓடி ஒளிந்து கொண்டது.

"எப்போது இந்தப் பூனையின் வாயில் அகப்படுகிறேனோ தெரியாது" என்று எலி பயந்து பயந்து இருந்தது.

''என்றோ ஒரு நாள் இந்த எலியைப் பிடித்துத் தின்னாமல் விடப் போவதில்லை” என்று பூனை மனதில் உறுதி கொண்டிருந்தது.

ஒருநாள், ஒரு வேடுவன் அந்த மரத்தடிக்கு வந்தான்.

அந்த மரத்தில் இருந்த காட்டுப் பூனையைக் கண்டான்.

அதைப் பிடித்துத் தின்ன வேண்டுமென்று ஆசை கொண்டான். பூனை அந்த இடத்தில் இல்லாத நேரமாகப் பார்த்து அந்த மரத்தினடியில் ஒரு வலையை விரித்தான்.

வலைக்குள், பூனைக்குப் பிடித்தமான இறைச்சித் துண்டொன்றைப் போட்டு வைத்து விட்டுப் போய் விட்டான்.

உணவு தேடச் சென்ற பூனை தனது இருப்பிடமாகிய மரத்தினடிக்கு வந்தது.

வலைக்குள் இருந்த இறைச்சித் துண்டைப் பார்த்தது.

ஆசைப்பட்டு அதைத் தின்ன முயன்றது.

வலையைக் காணாமல் வலையில் கால் வைத்து வலைக்குள் மாட்டிக் கொண்டது.

வலையிலிருந்து வெளியே வர முயன்றது.

முடியவில்லை.

வேடன் விரித்த வலையில் தான் அகப்பட்டுக் கொண்டிருப்பதைப் பூனை உணர்ந்து கொண்டது.

"தப்புவதற்கு இனி ஒரு வழியுமில்லை."

வேடன் வந்தால் அடித்துக் கொன்று விடுவான்.

இன்று வேடனுக்கு இரையாக வேண்டி வந்துவிட்டதே" என்று நினைத்து வருந்தியது.

செய்வதறியாது திகைத்தது.

அப்போது வேடன் வரும் காலடி ஓசை கேட்டது.

பூனைக்கு மரண பயம் வந்து விட்டது.

கால்களை இழுத்து இழுத்துப் பார்த்தது.

பற்களால் வலையைக் கடித்துப் பார்த்தது.

என்ன செய்தும் தப்பிப் பிழைக்க வழி கிடைக்கவில்லை.

அங்கும் இங்கும் பார்த்தது.

தன் உயிரைக் காப்பாற்ற ஏதாவது வழி பிறக்காதா என்று ஏங்கியது. பூனை படும் பாட்டை அதன் சத்தத்திலிருந்து அறிந்து கொண்ட எலி வெளியே வந்து எட்டிப் பார்த்தது.

பூனை படும் மரண அவஸ்தையைப் பார்த்துப் பரிதாபப்பட்டது.

எலி தனது வளையிலிருந்து வெளியே வந்து தன்னைப் பார்ப்பதைப் பூனை கண்டு கொண்டது.

"நண்பா! என்னைக் காப்பாற்று... என்னைக் காப்பாற்று" என்று எலியைப் பார்த்துக் கதறி அழுதது பூனை.

எலி பூனையைப் பார்த்து.

உன்னைப் பார்க்கப் பாபமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் எப்படி உன்னைக் காப்பாற்றுவது" என்று கேட்டது.

"நீ உன் கூரிய பற்களால் இந்த வலையை அறுத்துவிட்டால் போதும். நான் தப்பி விடுவேன். தயவு செய்து ஓடி வந்து இந்த வலையை அறுத்து என்னைக் காப்பாற்று" என்று பூனை எலியைப் பார்த்துக் கெஞ்சிக்

கேட்டது.

எலிக்கும் மிகவும் இரக்கம் வந்து விட்டது.

சரி. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன். ஆனால் நான் வலையை அறுத்ததும் நீ என்னைப் பிடித்துத் தின்னக்கூடாது" என்றது எலி. 'நண்பா! என்னுயிரைக் காப்பாற்றும் உன்னை நான் கொல்வேனா. தயவு செய்து என்னைக் காப்பாற்று" என்றது பூனை.

எலி ஒன்றும் சொல்லாமல் நின்றது.

'நண்பா! என்ன யோசிக்கிறாய். ஓடி வா. இந்த வலையை அறுத்து விடு. வேடன் வந்து கொண்டிருக்கிறான்" என்று பதற்றத்தோடு பூனை சொன்னது.

"நீ இப்பொழுது இப்படித்தான் சொல்வாய். ஆனால் உன் ஆபத்து நீங்கிய பின் என்னைப் பிடித்துத் தின்னாமல் விடமாட்டாய். அதுதான் யோசிக்கிறேன்" என்றது எலி.

''நண்பா! என்னை நம்பு. உயிரைக் காப்பாற்றியவர்களை யாராவது கொல்வார்களா? தயவு செய்து என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சியது பூனை.

வேடன் வந்து கொண்டிருந்தான்.

எலி யோசித்துப் பார்த்தது.

இந்தப் பூனையை நம்ப முடியாது.என்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியை வைத்துக் கொண்டு தான் இந்தப் பூனையைக் காப்பாற்ற வேண்டும்." என்று முடிவெடுத்தது எலி.

வேடன் அருகில் வர வர பூனைக்கு உயிர் போய்ப் போய் வந்தது.

பூனையின் உயிரைக் கொண்டு போகும் எமனாக வேடன் நெருங்கி விட்டான்.

அவனது கையிலே ஒரு கூர்த் தடி இருந்தது.

தடியால் அடித்துக் குத்திப் பூனையைக் கொல்ல அவனுக்கு அதிக நேரம் தேவையில்லை.

பூனையோ எலியைப் பார்த்துக் கெஞ்சியது.

வேடனைப் பார்த்துப் பயந்து நடுங்கியது.

இன்னும் இரண்டு மூன்று எட்டு வைத்து நடந்தால் வேடன் வந்து விடுவான் என்ற நிலை.

வேடன் மிக மகிழ்ச்சியாக வந்து கொண்டிருக்கிறான்.

பூனைக்கோ எலி தன்னைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையே அடியோடு அற்றுப் போய் விட்டது.

''இனி என்ன; இந்த வேடனின் கைத்தடியால் அடிபட்டுச் சாக வேண்டியது தான்" என்று நினைத்தது பூனை.

''இன்று நீண்ட நாட்களின் பின் பூனை இறைச்சிக் கறி, பெரிய விருந்துதான்” என்று நினைத்த வேடனின் வாயில் எச்சில் ஊறத் தொடங்கிவிட்டது.

அந்த நேரத்தில் திடீரென ஓடி வந்தது எலி.

ஒரு கணப்பொழுதுக்குள் வலையை அறுத்து விட்டு ஓடித் தப்பியது. பூனையோ எலியைப் பிடிப்பதை விடத் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதே முதல் வேலை என்று நினைத்து ஓடி மரத்தில் ஏறித் தப்பிக் கொண்டது.

வேடன் ஏமாற்றம் அடைந்தான்.

அறுந்து போன தன் வலையை எடுத்துக் கொண்டு வெறுங்கையோடும், ஏமாற்றத்தோடும் வீடு திரும்பினான்.

அன்றிரவு கழிந்தது.

பூனை நன்றாக விடியும் வரை கீழே இறங்கவில்லை.

நன்றாக விடிந்த பின் கீழே பார்த்துப் பார்த்துக் கவனமாகக் கீழே இறங்கி வந்தது பூனை.

வலையுமில்லை. வேடனும் இல்லை.

எலியின் வளைக்கு அருகில் வந்து, 'நண்பா! வெளியே வா!' என்று அழைத்தது.

எலியோ பயந்து போய் உள்ளே இருந்தது.

''நண்பா! என் உயிரைக் காப்பாற்றிய உன்னை நான் கொல்வேனா?

உனக்கு நன்றி கூறவே நான் வந்திருக்கிறேன்.

இனிமேல் நாங்கள் நண்பர்களாக இருப்போம்.

ஒரே இடத்தில் குடியிருக்கும் நாங்கள் ஒற்றுமையாக இருப்பது நல்லதல்லவா" என்று பூனை கூறியது.

''இன்று இப்பொழுது உன் மனம் இப்படி இருக்கிறது.

இன்னும் சிறிது நேரத்தில் பசி வரும்போது உன் மனம் எப்படி இருக்குமோ தெரியாது" என்றது எலி.

இல்லை. நான் உன்னைக் கொல்வதில்லை என்று சத்தியம் செய்கி றேன். வெளியே வா. நாங்கள் நண்பர்களாக இருப்போம்" என்றது பூனை. "பசி வரும் போது உன் சத்தியத்தை நீ காப்பாற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கில்லை” என்றது எலி.

''நண்பா! நான் இனி எலிகளையே உண்ண மாட்டேன். என்னை நம்பு." என்றது பூனை.

நீ எம்மைத் தின்னாமல் விட்டாலும் உன்னிடம் வரும் உன் இனத்துப் பூனைகள் எம்மினத்து எலிகளைத் தின்னாமல் விட்டு விடுங்களா?அல்லது உனது பரம்பரை எனது பரம்பரையைத் தின்னாமல் விட்டு விடுமா?" என்றது எலி.

பூனைக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.

''நாங்கள் நண்பர்களாக இருக்கவே முடியாது.

பகைவர்கள் ஆக இல்லாமல் இருந்தாலே போதும்.

கடவுளின் படைப்பு நியதியை நாம் மாற்ற முடியாது.

உன்னை அந்த ஆபத்திலே இருந்து நான் காப்பாற்றியது என் இரக்க குணத்தால் தானே தவிர உன்னோடு நட்பாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்தால் அல்ல" என்றது எலி.

பூனை அதைக் கேட்டு அமைதியாக மரத்திலே ஏறிக் கொண்டது.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.

தமிழர் நலம்

சிந்தனை சிறு கதைகள் : பூனையும் எலியும் - குறிப்புகள் [ ] | Thought short stories : Cat and mouse - Tips in Tamil [ ]