விழாக்கள்

ஆனித் தேர் திருவிழா, நெல்லையப்பர் கோவில் தேரோட்டம், இந்து - முஸ்லிம் ஒற்றுமை

[ ஆன்மீகம்: சிவன் ]

Festivals - Aani car Festival, Nellaipar temple procession, Hindu-Muslim unity in Tamil

விழாக்கள் | Festivals

அருள்மிகு நெல்லையப்பருக்கும், அருள்தரும் காந்திமதி அம்பாளுக்கும் விழாக்களும், பூசைகளும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் (ஜூன்-ஜூலை) ஆனிப்பெருந்திருவிழா மிகச் சிறப்பாகப் பத்து நாட்கள் கொண்டாடப்படும்.

விழாக்கள்

ஆனித் தேர் திருவிழா 


அருள்மிகு நெல்லையப்பருக்கும், அருள்தரும் காந்திமதி அம்பாளுக்கும் விழாக்களும், பூசைகளும் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆண்டுதோறும் (ஜூன்-ஜூலை) ஆனிப்பெருந்திருவிழா மிகச் சிறப்பாகப் பத்து நாட்கள் கொண்டாடப்படும்.

நெல்லையப்பருக்கும். காந்திமதிக்கும் 9ஆம் திருநாளன்று தேரோட்டம் நடைபெறும். 450 டன் எடையும், 28 அடி அகலம், 28 அடி நீளம், 35 உயரமுள்ள நெல்லையப்பர் பெரிய தேர், ரத வீதிகளில் பவனி வர பக்தகோடிகள் தரிசித்து மகிழ்வார்கள்.

வருடாபிசேகம் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் நடைபெறும். ஆடித்திங்களில் ஆடிப்பூர உற்சவம் பத்து நாட்களும் அம்பாளுக்கு நடைபெறும். பௌத்தி, உற்சவம் நான்கு நாட்கள் நடைபெறும். ஐப்பசித் திங்களில் திருக்கல்யாணத் திருநாள் பதினைந்து நாட்கள் அம்பாளுக்கு நடைபெறும் விழாவாகும்.

கம்பை நதியின் அருகிலே அன்னை தவமிருந்து இறைவனது காட்சி கிடைக்கப்பெற்று, திருக்கல்யாணம் புரிந்து அம்மை அப்பனுமாகக் காட்சியளிக்கும் மகியை சொல்ல முடியாத பெருமையாகும். கந்தசஷ்டி திருவிழாவும், அருள்மிகு ஆறுமுகப்பெருமானுக்கு இலட்சார்சனையும் நடைபெறும்.

கார்த்திகை மாதங்களில் கார்த்திகை சோமவாரம் நான்கு வாரமும் நடைபெறும். மார்கழித் திங்கள் திருப்பள்ளி எழுச்சி முப்பது நாட்களும் நடைபெறும். திருவாதிரை பத்து நாட்கள் நடைபெறும். திருவாதிரை அன்று ஆருத்ரா தரினம் நடைபெறும்.

தைப்பூசத் திருநாள் தெப்ப உற்சவம் உட்பட பன்னிரண்டு நாட்கள் நடைபெறும். வைகாசித் திங்களில் சுவேதகேது திருநாள் அன்று இரவு செப்புரதம் உற்சவம் நடைபெறும். வைகாசித் விசாகத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். மாசி மகத்தன்று பொற்றாமரைத் திருக்குளத்தில் அப்பர் தெப்பம் நடைபெறும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி முதல் தேதியும், தமிழ் மாதங்களில் தை, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் முதல் நாள் காலை 6 மணிக்கும் விசேஷ பூசை நடைபெறும்.


நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்


நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்ற நெல்லையப்பர் ஆனித்தேர் திருவிழாவில், 1 லட்ச பக்தர்கள் பங்கேற்றுத் தேர் இழுத்தனர். இந்த ஆண்டுட 509-ஆவது ஆனித்தேர் திருவிழா நடைபெற உள்ளது.

9-ஆம் நாளன்று திருத்தேரோட்டம் நடக்கும். அதிகாலையில் பிள்ளையார், முருகன் ஆகிய சிறிய தேர்கள் இழுக்கப்பட்டு நெல்லையப்பர் சன்னதி அருகே நிறுத்தப்படும். தொடர்ந்து காலை 9 மணிக்கு நெல்லையப்பர் திருத்தேர் இழுக்கப்படும்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் நான்கு வடங்களையும் பிடித்து இழுப்பார்கள். இரும்புச் சக்கரம் பொருத்தப்பட்டுள்ளதாலும், ரத வீதிகளில் ஆங்காங்கே தேர் பதியாமல் இருக்க, இரும்புப் பிளேட்டுகள் அமைக்கப்பட்டிருப்பதாலும் தேர் தடையின்றி ஓடும்.

கடந்த சில ஆண்டுகளாக நெல்லையப்பர் தேர் ஒரே நாளில் நிலையை அடைவது குறிப்பிடத்தக்கது. லண்டன் மிகில் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 22 பேர் விக்டோரியா என்பவர் தலைமையில், கல்வி கலாசாரப் பயணமாகக் கடந்த ஆண்டு நெல்லைக்கு வந்தனர்.

தேரோட்ட விழா நிகழ்வுகளை கண்டு வியப்படைந்தனர். அவர்கள் கூறுகையில் இந்த விழா தங்களுக்குப் பிரம்பிப்பூட்டுவதாக இருக்கிறது. மக்களின் மகிழ்ச்சி வெளிப்பாடு. ஒற்றுமை உணர்வு, பக்தி என பல விஷயங்களை இந்த ஒரே விழா மூலம் கற்றுக்கொண்டுள்ளோம்.

கடந்த ஆண்டும் எங்கள் பள்ளி மாணவிகள் இந்த விழாவிற்கு வந்தனர் எனக் கூறினர். நெல்லையப்பர் கோவில் சுவாமிதேர், தமிழகத்தில் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்களுக்கு அடுத்தபடியாக 3-ஆவது மிகப்பெரிய தேர் ஆகும். மற்றப் பெரிய தேர்கள் யானை மற்றும் புல்டோசர் உதவியுடன் இழுக்கப்படும் நிலையில், நெல்லையப்பர் தேர் மட்டுமே இன்றும் பக்தர்களால் இழுக்கப்படுகிறது.

508 ஆண்டுகளாக இந்தத் தேரோட்டம், எந்தவிதத் தடங்கலுமின்றி தொடர்ச்சியாக நடைபெறுவதாகக் கோவில் வரலாறு தெரிவிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு மட்டும் 1948-ஆம் ஆண்டு தேரின் உச்சியில் ரிஷப கொடியுடன் இந்திய தேசிய கொடியும் கட்டப்பட்டு. இழுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்து - முஸ்லிம் ஒற்றுமை


இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. அன்வர்கான் என்ற ஒரு இஸ்லாமியரின் பெயரில் உற்சவர் உள்ளார். அதற்குக் காரணம் ஒன்றும் கூறப்படுகிறது.

ஒரு சமயம் அன்வர்கானின் மனைவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இந்த வயிற்றுவலிக்குப் பல மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. எனவே பல இடங்களுக்கு அன்வர்கான் அலைந்து திரிந்தார்.

இறுதியில் நெல்லையப்பர் - காந்திமதி அம்மனைத் தரிசித்தார். வயிற்றுவலி தீர்ந்தது. இதையடுத்து அன்வர்கான் உமக்கு வேண்டியவற்றைச் செய்கிறேன் என்று உறுதி அளித்தார்.

அவர் இந்த கோவிலுக்குத் தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் விளைநிலங்களை எழுதி வைத்தார். அன்வர்கான் விளைநிலங்கள் எழுதி வைத்த காரணத்தினால் அந்த இடங்கள் இவர் பெயரிலேயே அழைக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே உள்ள, அனவரதநல்லூர் கிராமம் இதற்குச் சான்றாகும். கோவிலுக்கு அன்வர்கானின் வேண்டுதலை நிறைவேற்றிய நெல்லையப்பரை அனவரதலிங்கர் என்றும் அழைக்கிறார்கள். அன்வர்கான், நெல்லையப்பரை வெளியில் நின்று வழிபட, சுவரை இடித்து வசதிசெய்து கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


நெல்லையப்பர் பற்றிய சுவையான தகவல்கள்!


1. நெல்லையப்பர் கோவிலின் மொத்த பரப்பளவு 14 ஏக்கர்.

2. தன் வியாபாரத்துக்காகப் பால்குடம் சுமந்துசென்ற ஓர் இடையனைத் தினமும் மூங்கில் முளை உருவில் தடுக்கி விழவைத்து. இறைவன் தன்னைக் காண்பித்துக் கொண்ட தலம் இது.

3. மூலவருக்கு வேணுவனநாதர் என்றும் ஒரு பெயர். வேணுவனத்தில் அதாவது மூங்கில் காட்டில், தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதாலேயே அவருக்கு இந்தப் பெயர் வந்தது.

4. அர்ச்சகர் இறைவனுக்கு நிவேதனம் தயாரிப்பதற்காக நெல் காயப்போட்டிருந்தார். அப்போது ஊர் முழுவதும் பெருமழை. ஆனால் நெல் காயப்போட்ட இடத்தில் மட்டும் மழைக் கோடுகளே வேலியாக அமைந்து, நீர் உள்ளே போகாதபடி காத்து நின்றன. இதனால்தான் இறைவன் நெல்லையப்பர் எனப்படுகிறார்.

5. கோவிலை ஆறு சபைகள் அலங்கரிக்கின்றன. சிந்து பூந்துறை தீர்த்த சபை, ஆச்சர்ய சபை, அம்பாள் கோவில் வடபுறமுள்ள செளந்தரசபை, கல்யாண சபை, சுவாமி கோவிலுக்கு முன் உள்ள ராஜசபை மற்றும் தாமிர சபை.

6. பொற்றாமரைக் குளம் உள்ளது. ஆனால் மதுரை மீனாட்சி கோவில் போலப் பொற்றாமரை இல்லை. நடுவில் நீராழி மண்டபம் உள்ளது.

7. கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று நான்கு திக்குகளிலும் இக்கோவிலுக்கு நான்கு ராஜகோபுரங்கள். உள்ளன.

8. நந்தி பிரமாண்டமானது. எழுந்து நிற்க யத்தனிக்கும் கோலம். நெல்லையப்பரைச் சுமந்து செல்ல எப்போதும் தயாராக இருக்கிறதாம் இந்த நந்தி.

9. பக்தர்கள் இளைப்பாற ஊஞ்சல் மண்டபம், மகா மண்டபம், நவக்கிரக மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், ஆயிரங்கால் மண்டபம் ஆகியவை உள்ளன.

10. கருவறைக்குப் படியேறிச் செல்லும்போது, அபூர்வ இசைத்தூண்களைக் காணலாம். கையால் தட்டினாலேயே ஏழு ஸ்வரங்களை ஒலிக்கும்.

11. மூல லிங்கம் மொத்தம் 21 ஆவுடைகள் கொண்டது. என்றும், பூமிக்குள் 20 ஆவுடைகள் அமிழ்ந்திருக்க, ஒன்று மட்டும் வெளியே தெரிகிறது என்றும் சொல்கிறார்கள்.

12. அம்பிகையின் பெயர் காந்திமதி. இவர் கோவிலில் தினமும் ஆறுகால பூஜை நடக்கிறது. இதில் உச்சிகால பூஜையை அம்மனே நேரில் வந்து நடத்துவதாக ஐதிகம்.

13. நிறை கோலத்தில் அருள்பாலிக்கும் காந்திமதி அம்மனுக்கு, வியாழன்தோறும் தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது.

14. ஆறுமுகப் பெருமான் சந்நதி விசேஷமானது. முருகன். வள்ளி - தெய்வானை மூவரும் மயில் மீது அமர்ந்து அருள் வழங்குகிறார்கள்.

15. இங்கிருக்கும் பொல்லாப் பிள்ளையாரை வேண்டி 41 நாட்கள் விரதம் இருந்தால், குழந்தைப்பேறு கிட்டும் என்று நம்பிக்கை. அவ்வாறு பிள்ளை பெற்றவர்கள் அந்தக் குழந்தையைச் சந்நதியின் சன்னல் போன்ற பகுதியில், உட்புறமாகத் தந்து வெளிப்புறமாக வாங்கிக் கொள்கிறார்கள்.

16. கார்த்திகை மாதத்தில் தினமும் காலை நான்கு மணிக்குக் கோவில் தரிசனத்திற்காகத் திறந்து வைக்கப்படுகிறது.

17. மூலவர் நெல்லையப்பருக்கு அருகில் அரங்கநாதர், தனி நந்திகளில் தரிசனம் தருகிறார். இது சைவ – வைணவ சங்கமக் கோவில்,

18. மாநிலத்தில் மூன்றாவது மிகப்பெரிய தேர். நெல்லையப்பருக்கு உரியதுதான். இது 1505ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டது.

19. இத்தலம் பஞ்ச சபைகளுள் ஒன்று. அது தாமிர சபை. இதில் தரிசனம் தரும் நடராஜர் தாமிர சபாபதி எனப்படுகிறார்.

20. நெல்லையப்பர் ஆலயம் சுமார் ஆயிரம் 2 ஆண்டுகளுக்கு முந்தையது.

21. தேவாரப் பாடல் பெற்ற பாண்டிநாட்டுத் தலங்களில் இது 14ஆவது தலம்.

22. தெற்கிலிருந்து வடக்காக 756 அடி நீளமும், மற்றும் மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்ட, ஆசியாவிலேயே மிகப்பிரமாண்டமான சிவன் ஆலயம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

23. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது போன்று இங்குள்ள விநாயகரும் 9 அடி உயரத்தில், இதே திருநாமத்துடன் 'முக்குறுணி விநாயகர்' என்றே அழைக்கப்படுகிறார். ஆனால், வலது கையில் மோதகம், இடது கையில் தந்தம் என மாற்றி வைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

24. மூலவர் சன்னிதானத்தைச் சுற்றி மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பு. தமிழகத்திலேயே மூன்று மூலவர்களைக் கொண்ட கோவில் என்றால் அது ஸ்ரீநெல்லையப்பர் கோவில் மட்டுமே. சுயம்பு மூர்த்தியான, மூலவர் "வேண்ட வளர்ந்தநாதர்" பிரதான சன்னிதியில் "நெல்லையப்பர்" என்று அழைக்கப்படுகிறார். பெரிய திருமேனி லிங்கமாக அருள்பாலிக்கிறார். மூங்கில் வேணுவனேசுவரர், வெய்முத்தீசர் ஆகிய திருநாமங்களும் வழங்கப்படுகிறது.

25. சிவலிங்கத்தின் மத்தியில் அபிஷேகத்தின்போது அம்பிகையின் திருஉருவத்தைக் காணலாம். சிவனுக்குள் சக்தி அடக்கம் என்பது இக்கோலம் உணர்த்துவதாக உள்ளது. இதனால் பெருமானுக்கு "சக்தி லிங்கம்" என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது.

26. மூலவர் சன்னதிக்கு முன்புள்ள பாதாளத்தில் திருமூல மகாலிங்கம் சன்னதி உள்ளது. இங்கு மகாவிஷ்ணு பூசித்த லிங்கம் ஒன்று உள்ளது. பாதாள லிங்கத்தில் உள்ள சிவபெருமானே ஆதிமூலவர் என்றழைக்கப்படுகிறார்.

27. இத்தலம் திருஞானசம்பந்தரால் பாடல்பெற்ற தலமாகும்.

28. அருணாசலக் கவிராயர் இயற்றிய வேணுவன புராணத்திலும், சொக்கநாதபிள்ளையின் காந்திமதியம்மை பதிகத்திலும் இத்தலம் பற்றிய ஏராளமான குறிப்புகள் உள்ளன.

29. இத்தலத்தில் உள்ள அம்மன், காந்திமதி வடிவுடை அம்மை, திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

30. பிரதோச காலங்களில் இக்கோவிலில் அம்பிகைக்குப் பிரதோச வழிபாடு நடப்பது தனிச்சிறப்பு. வழக்கமாக அனைத்துக் கோவில்களிலும் சிவன் சன்னதி எதிரேயிருக்கும் நந்திக்கு மட்டுமே பூசை நடக்கும். ஆனால், இங்கு அம்மன் சன்னதியிலுள்ள நந்திக்கும் பிரதோச பூசை நடைபெறுகிறது. அப்போது அம்பிகை ரிஷப வாகனத்தில் எழுந்தருளுவது கண்கொள்ளாக் காட்சி.

31. அம்மன் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மகாசிவராத்திரியன்று நள்ளிரவில் நெல்லையப்பருக்கு மட்டுமின்றி, அம்பிகைக்கும் நான்கு கால அபிசேகம், மற்றும் பூசைகள் நடைபெறுகிறது.

32. "கணவர் நெல்லையப்பருக்கு அன்னம் பரிமாறும் அம்பிைகை" என்று போற்றப்படும் காந்திமதி அம்மன், உச்சிக் காலத்தில் ஐயனுக்கு அன்னம் பரிமாறி உபசரிப்பதாக ஐதீகம். இதன் அடிப்படையில் அம்மன் சன்னதி அர்ச்சகர்கள் மேளதாளத்துடன் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, பருப்பு, சாம்பார் சாதம், ஊறுகாய் என வகைவகையான நைவேத்யங்களைச் சிவன் சன்னதிக்குக் கொண்டு சென்று, அங்குள்ள அர்ச்சகர்கள் மூலமாகச் சிவபெருமானுக்குப் படைக்கின்றனர். இந்தப் பூசை முடிந்தபின், அம்மனுக்கு அதே நைவேத்யம் வைத்துப் பூசை நடக்கிறது.

33. இங்குள்ள துர்க்கை தெற்கு நோக்கியபடி. சிங்கம் மற்றும் மான் வாகனத்துடன் காட்சி அளிக்கிறாள். சிம்மமும், மானும் ஒருசேர இருப்பதால், எதிரிகளையும் அன்பால் அடக்கும் வல்லமையை அருளுகிறாள். மேலும் பண்டாசுரனை வதம் செய்த அம்மன் சிலையும், இங்கு உள்ளது. துர்கையின் வடிவான இந்த அம்மன் "மஞ்சள் வடிவாம்பிகை" என்று போற்றப்படுகிறாள்.

34. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள திருமாலின் திருமார்பில் லிங்கம் உள்ளது மற்றொரு சிறப்பம்சம். கருவறையின் அருகில் தனி சன்னதியில் திருமால், பள்ளிகொண்ட கோலத்தில், சிவலிங்க பூசை செய்தபடி இருக்கிறார். அருகில் மார்பில் சிவலிங்கத்துடன் காட்சி தரும், உற்சவர் விஷ்ணுவையும் காண முடிகிறது. திருமாலை இத்தகைய கோலத்தில் காண்பது அரிது.

35. இக்கோயிலுக்கு வந்து வணங்குவோர்க்கு, மன அமைதியும் நல்வாழ்வும் உண்டாகும் என்பது ஐதீகம்.

36. மதுரை மீனாட்சிக்குச் சமமான சிறப்புப்பெற்று விளங்கும் காந்திமதி அம்பாளை வணங்குவோர்க்கு, அவர்கள் வாழ்வின் கஷ்டங்கள் நீங்கி நல்ல வாழ்வும், செல்வசெழிப்பும் உண்டாகும்.

37. பக்தர்கள் தங்கள் காணிக்கையாகப் பால், தயிர், இளநீர், எண்ணெய் மற்றும் இறைவனுக்கு, அபிஷேகம் போன்றவைகளைச் செய்கின்றனர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வரும் பக்தர்களுக்கு வழங்கி, தங்கள் நேர்த்திக்கடனை நிறையப் பேர் நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

38. ஆனிப் பெருந் திருவிழா தேரோட்டம் 10 நாட்களுக்கு இத்திருத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா என்று நிறைய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகின்றன.

39. திருவிழாக் காலங்கள் மட்டுமல்லாமல் இதர நாட்களிலும் நிறைய பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து, நெல்லையப்பரைத் தரிசித்துச் செல்கின்றனர். தங்கள் பிரார்த்தனைகளுக்கான நேர்த்திக்கடனையும் செய்கின்றனர்.

40. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளைநிற நந்தி படுத்திருக்கும். அதற்குமேல் ஒரு துணித்திரை படுக்கை வாக்கில் கட்டப்பட்டிருக்கும். நந்தியின் கொம்பு வளர்ந்து அந்தத் திரையைத் தொட்டுவிட்டால், உலகம் அழிந்துவிடும் என்று பேச்சு வழக்கில் ஒரு தகவல் உள்ளது.

41. மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. 3 யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும்.

42. அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் "தங்கப்பாவாடை சாத்தப்படுகிறது. அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும், பெண்கள் மாவிளக்கு எடுப்பது மிக விசேஷம்.

43. இக்கோயில் ஒரு சிற்பக்கருவூலம் என்று தான் சொல்ல வேண்டும். நுழைவயிலிலேயே இருக்கும் பல்வேறு சிற்பங்கள், உட்பிரகாரத்துக்குச் செல்லும் நுழைவாயிலில் உள்ள பாண்டவர், கண்ணனின் சிற்பங்கள் எல்லாம் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டும். ஆடைகளும், அணிகளும். அங்க அசைவுகளும் அற்புதம்.

44. வாயிலில் உள்ள கொடிக் கம்பத்துக்கு அருகிலேயே வேலி காத்த படலம் நடைபெறுமாம். அங்கேதான் முற்காலத்தில் நெல்லுக்கு வேலி போட்டுக் காத்ததாகக் கருதப்படுகிறது.

45. நெல்லையப்பருக்கு அருகிலேயே கோவிந்தராஜ பெருமாள் சயனித்திருக்கிறார். அவர் மார்பில் திருமகளுக்கு பதிலாக ஈசனின் திருவுருவம் உள்ளது. அவர் வலது கையோ அருகிலிருக்கும் லிங்கத்துக்கு வில்வார்ச்சனை செய்து கொண்டிருக்கிறது.

46. வெளிப்பிரகாரத்து வழியாகச் சென்றால், கோவிலுக்குத் திருப்பணி செய்த மன்னர்கள், செல்வந்தர்களின் பல சிற்பங்கள் இருக்கின்றன.

47. அம்மா மண்டபம் எனப்படும் மிகப்பெரிய மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு சிற்பமும் ஒரு அற்புதம். வீரர்கள், சாதாரண மனிதர்கள், மேலும், தெய்வங்களோடு ஒரு ஜோடி சிரிக்கும் குரங்குகளும் இருக்கின்றன.

48. திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் ஆலயமானது, தமிழகத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாகும். இது பாண்டிய மன்னர்களால் கி.பி. 700ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

49. சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தனித்தனியே கட்டப்பட்ட இரண்டு கோவில்களை உள்ளடக்கிய பிரம்மாண்டமான கோயில் இதுவாகும். இரண்டு கோவில்களும், 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சங்கிலி மண்டபம் என்னும் மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளன.

50. புராணங்களின்படி, சிவபெருமான் தமது தாண்டவ நடனத்தை ஆடிய பல்வேறு தளங்களில், நெல்லையும் ஒன்றாகும். இதனால், பரத நாட்டியம் போன்ற பழமையான நடனக் கலைகளுக்கும் இதர கலைகளுக்கும் முக்கியமான இடமாகத் திருநெல்வேலி கருதப்படுகிறது. இந்நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக, இக்கோவிலின் உள்ளே, தாமிரத்தினால் ஆன மேடை என்னும் பொருள்படும் தாமிர அம்பலம் / தாமிர சபை அமைக்கப்பட்டுள்ளது.

51. நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளதால் இக்கோவிலைக் கண்டுபிடித்து வந்து சேருவதில், சுற்றுலாப் பயணிகளுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.

52. திருநெல்வேலி நகரம் சிவபிரான் ஆட்சி செய்யும் திருக்குற்றாலத்திற்குக் கிழக்குத் திசையிலும். மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரைக்குத் தெற்குத் திசையிலும், ஆறுமுகன், வேல்முருகன் ஆட்சி செய்யும் திருச்செந்தூருக்கு மேற்குத் திசையிலும், முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாக்குமரியை அடுத்த சுசீந்திரத்திற்கு வடக்குத் திசையிலும் அமையப் பெற்றுள்ளதாக நெல்லை தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

53. நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில், திருச்சிராப்பள்ளியில் இருந்து 284 கி.மீ தொலைவிலும் மதுரையில் இருந்து 154 கி.மி. தூரத்திலும் அமைந்துள்ளது. திருநெல்வேலி மாநகரத்தின் நடுநாயமாக இத்திருக்கோயில் அமைந்துள்ளது. நெல்லை புகைவண்டி நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

54. பெருமை வாய்ந்த திருநெல்வேலிக்கு வேணுவனம். நெல்வேலி, நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி. சாலிநகர், பிரம்மவிருந்தபுரம், தாருகாவனம் போன்ற பெயர்களும் உண்டு. இவ்வூர் மேலும், தென்காஞ்சி, கன்னிப்பதி, கீழ்வேம்பு நாட்டுக் குலசேகர சதுர்வேதி மங்கலம் என்ற பெயர்களுடன் விளங்குகிறது.

55. திருவிளையாடல் புராணத்தில் மூன்றாம் திருமுறை, ஏழாம் திருமுறை, பன்னிரண்டாம் திருமுறை நூல்களில் இத்திருக்கோயிலைப் பற்றிப் பாடப்பட்டுள்ளன. மேலப் பிரகாரத்தில் தாமிரசபை அமைந்துள்ளது.

56. இந்த ஆலயத்தில் சுவாமி ரதம், அம்மன் ரதம், விநாயகர் ரதம், சுப்பிரமணியர் ரதம், சண்டிகேஸ்வரர் ரதம் என ஐந்து ரதங்கள் இருக்கின்றன.

57. ஊஞ்சல் மண்டபத்தின் வடக்குப் பக்கமாகப் பொற்றாமரைக் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தில் சிவனே நீர் வடிவமாய் உள்ளதாக ஐதீகம். பிரம்மன் தங்க மலரோடு வந்து எழுந்தருளியதாகவும் நம்பிக்கை உள்ளது.

58. நெல்லையப்பர், பிள்ளை அவர்கள் பாடிய திருநெல்வேலி தல புராணம், அருணாசலக் கவிராயர் இயற்றிய வேணுவன நாதர் புராணம், வித்வான் சொக்கநாதப் பிள்ளை பாடி அருளிய காந்திமதி அம்மை பிள்ளைத் தமிழ், ஸ்ரீதாமிரபரணி மகாத்மியம், காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி, நெல்லை வருக்கை கோவை, நெல்லைச் சிந்து, திருநெல்வேலி சேத்திரக் கும்மி, மும்மணிக்கோவை போன்ற நூல்கள் இத்தல இறைவன், இறைவியின் அருளினைச் சிறப்பித்துக் கூறுகின்றன.

59. ஒவ்வொரு தூண்களின் அடிபாகத்தில் அக்கோயிலைக் கட்ட உதவியவர்களின் சிலைகளும், தூண்களின் மேற்புறத்தில் சிங்கங்களின் வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

60. திருக்கோயிலில் உள்ளே மட்டுமல்லாது. வாயிற் கதவுகளில் கூட அழகிய சிற்ப வடிவங்கள் உள்ளன.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: சிவன் : விழாக்கள் - ஆனித் தேர் திருவிழா, நெல்லையப்பர் கோவில் தேரோட்டம், இந்து - முஸ்லிம் ஒற்றுமை [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Festivals - Aani car Festival, Nellaipar temple procession, Hindu-Muslim unity in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை








தொடர்புடைய தலைப்புகள்