தங்கம் போல ஜொலிக்கும் நாச்சியார் கோவில் குத்துவிளக்கு: என்ன ஸ்பெஷல்?
தமிழகத்தின் இல்லங்களில் தினம்தோறும் அந்திவேளையில் திருவிளக்கேற்றி வழிபடுவது வழக்கம்.
சமயச் சடங்குகளிலும் சமூக விழாக்களிலும் மங்கல நிகழ்வுகளிலும் விளக்கேற்றுதல் என்பது மரபு.
அப்படிப்பட்ட விளக்குக்கு என்று தனிச்சிறப்பை பெற்றிருக்கிறது நாச்சியார் கோவில்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது நாச்சியார் கோவில். நாச்சியார் கோவிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் தயாரிக்கப்படும் குத்து விளக்கானது நாச்சியார் கோயில் குத்து விளக்கு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இவை மிகவும் புகழ்பெற்றது.
மண்ணும் பொன்னைப்போல ஜொலிக்கும் என்பார்கள்.
நாச்சியார் கோவில் பித்தளை குத்துவிளக்கு ஜொலிப்பதற்கு அந்தப் பகுதி மண்ணும் ஒரு காரணம் என்கின்றனர் குத்து விளக்கு உற்பத்தியில் ஈடுபட்டு வருபவர்கள்.
வெற்று வார்ப்பாக இருக்கும் விளக்கு, வெவ்வேறு அளவுகளில் நான்கு பகுதிகளாகத் தயாரிக்கப்பட்டு பின்னர், அவை ஒன்றாகத் திருகப்படுகின்றன.
அதன் உச்சியில் 'பிரபை' என அழைக்கப்படும் மகுடம் போன்ற அமைப்பு பொருத்தப்படுகிறது. இது பொதுவாக அம்சப் பறவை அல்லது அன்னப்பறவை வடிவத்தில் இருக்கும்.
விளக்கு ஒரு மேலோட்டமான கிண்ணத்தை வைத்திருக்கும் பெண் உருவ வடிவத்திலோ அல்லது ஒரு மரக் கிளைகளின் வடிவத்திலோ செய்யப்படலாம். இக்குத்துவிளக்கு நான்கு பாகங்கள் உடையது.
1.கீழ்ப்பாகம்
விளக்கைத் தாங்கும் அழகிய அடிப்பகுதி
2.தண்டு
விளக்கின் நீட்சி இடத்தைப் பொறுத்தது
3.தங்குகுழி
எண்ணெய் நிற்கும் அகல்
4.பிரபை
விளக்கின் சிரசாகக் கருதத்தக்கது
நாச்சியார் கோவில் குத்து விளக்கு அரை அடி முதல் 7 அடி உயரம் வரை வடிவமைக்கப்படுகிறது.
அகலில் திரி அடங்கி அமைந்து சுடர் ஒரே சீராக எரிவதற்கு ஏதுவாக 'V' வடிவில் குழிந்து முன் முனைத்த ஓர் அழகிய பகுதி உண்டு. பிரபையில் மரபாக அமைந்த ஒர் அன்னமும் உண்டு.
எழிலார்ந்த அத்தோற்றம் விளக்குக்கு ஓர் தெய்வீக சோபை தரும்.
ஐந்து முக, ஏழு முக அமைப்பும், நாகாசு வேலைப்பாடும் கொண்டதால் நாச்சியார் கோவில் குத்து விளக்குக்கு வீடுகள் மற்றும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இங்கு உற்பத்தி செய்யப்படும் குத்து விளக்குகளை தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
நாச்சியார் கோவில் குத்து விளக்கு புவிசார் குறியீடு பெற்றிருப்பதும் தனிச்சிறப்பு.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்