இயற்கை உணவால் குணத்தை மாற்றலாம்

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

Natural food can change the character - Health Tips in Tamil

இயற்கை உணவால் குணத்தை மாற்றலாம் | Natural food can change the character

மூன்று வேளையும் சமைத்த உணவுவகை களையே ருசித்து அடிமைப்பட்டுப் போன நாவிற்கு இயற்கை உணவுகள் ருசிக்குமா....? கண்டிப்பாய் ருசிக்கும். அது எப்படி....?

இயற்கை உணவால் குணத்தை மாற்றலாம்

 

மூன்று வேளையும் சமைத்த உணவுவகை களையே ருசித்து அடிமைப்பட்டுப் போன நாவிற்கு இயற்கை உணவுகள் ருசிக்குமா....? கண்டிப்பாய் ருசிக்கும். அது எப்படி....?

சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்களே அதுபோல், முதலில் இயற்கை உணவுகளை உட்கொள்ள மனதளவில் தயாராகுங்கள். சமைத்த உணவுகளுக்கும், இயற்கை உணவுகளுக்கும் உள்ள வேறுபாட் டினை ஒப்பிட்டுப் பாருங்கள். சமைத்த உணவுகளில் சத்துக்கள் வீணடிக்கப்படுகின்றன. மேலும் உணவு சமைக்கப்படுவதனால், அவற்றை நம் ஜீரண உறுப்புகள் கூட முழுமையாக ஏற்றுக்கொள்வதில்லை.

சமைத்த உணவில் உள்ள பெரும்பாலான சத்துக்கள், கழிவுகளாகவே வெளியேற்றப் படுகின்றன. இதனாலேயே, மனிதனுக்கு இருப்புச்சத்துக் குறைவதனால் ஒரு நோய்... சுண்ணாம்புச் சத்து குறைவதனால் ஒரு நோய்.... புரதச் சத்து குறைவதனால் ஒரு நோய் என நோய்கள் பலவிதமாய் மனித உடலை ஆட்டுவிக்கிறது.

சமைத்த உணவைச் சாப்பிடும் மனிதன், காரம், புளி, உப்பு போன்ற ருசியுள்ள உணவுகளை அதிகம் ருசிப்பதனால், அவனுடைய தனிமனித நடத்தையில் கோபம், அகங்காரம், பொறாமை போன்ற குணாதிசயங்களுடன் வாழ முற்படுகிறான். இதனால் நாட்டில் குற்றங்கள், வன்முறை, கொலை, களவு போன்றவை பெருகிச் சமூகச் சீரழிவும் ஏற்படுகிறது.

ஆனால், இயற்கை உணவுகளை உட்கொள்ளும் மனிதன் இயல்பாக - இயற்கையாகச் சிந்திக்கிறான். காரம், புளி, உப்பு இல்லாத இயற்கை உணவுகள் ஒருவனுக்குத் தீர்க்கமான சிந்தனையைத் தருவதால், அவனுடைய செயல்பாடுகளில் ஒரு தெளிவு, அமைதியான வாழ்வியல் முறை இவை அனைத்தும் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் சமூக அமைப்பில் குற்றங்கள், வன்முறை குறைந்து, நல்லதொரு சமூக அமைப்பு ஏற்படுகிறது.

அது சரி!... இயற்கை உணவுக்கு மாறுவது எப்படி...? முதலில் இந்த சித்தர் பாடலைக் கவனியுங்கள்.

'காலை இஞ்சி கடும்பகல் சுக்கு

மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண

கோலையூன்றிய கிழவனும்

காலால் குலுக்கி நடப்பானே!'

- இது சித்தர் பாடல்.

48 ரூபாயில் உன்னத அழகு பெறும் ரகசியம் இந்தப் பாடலில்தான் இருக்கிறது. ஒரு நாள் செலவு ரூபாய் ஒன்று மட்டும்தான். ஒரு மண்டலத்தில் உடல் சுத்தி தரும் இயற்கை உணவு. காலையில் இஞ்சி... காலையில் - அதுவும் வெறும் வயிற்றில் இஞ்சியை எப்படிச் சாப்பிடுவது....? நம்மில் பலர், சமைத்த உணவுகளில் காரசாரமான பேர்வழிகள்தான். இதனால் காலையில் பச்சை இஞ்சியை மென்று தின்று இயற்கை உணவுக்கு மாற நினைத்தால், வீணாய் வெறும் வம்பில் மாட்டிக்கொண்ட கதையாகிவிடும்.

வெறும் வயிற்றில் பச்சை இஞ்சியை மென்று தின்றால் குடற்புண் ஏற்படுமே தவிர, குணம் ஏதும் கிடைக்காது. நான் சொல்கிறபடி, இஞ்சியை ருசித்துப் பாருங்கள். அதன் பயனை நீங்களே உணருவீர்கள்.

நன்கு விளைந்த இஞ்சியை அரை கிலோ அளவில் வாங்கி, பின்னர் அந்த இஞ்சியை மிக சன்னமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும், ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் அளவில் தண்ணீர் எடுத்து அதன் மேல்வாயைத் துணியால் கட்டி அதன் மேல் நறுக்கிய இஞ்சித் துண்டுகளைப் போட்டு, பாத்திரத்தை அடுப்பேற்றவும்.

தண்ணீர் நன்கு கொதித்து, இஞ்சியில் உள்ள ஈரப்பதம் குறைந்து, இஞ்சி உலர ஆரம்பிக்கும். அந்தப் பதத்தில் இஞ்சியை எடுத்து அகன்ற பாத்திரத்தில் ஒரு கிலோ அளவில் சுத்தமான தேனை எடுத்து, அத்துடன் இஞ்சித் துண்டுகளை ஒரு வாரம் வரை ஊறப்போடுங்கள். இதோ! இஞ்சித் தேனூறல் தயாராகிவிட்டது.

தினசரி காலை வெறும் வயிற்றில், நான்கு இஞ்சித் துண்டுகளைத் தொடர்ந்து சாப்பிட்டுப் பாருங்கள். உடம்பில் உள்ள பித்தம் தணியும், கை, கால் எரிச்சல், வாந்தி, ஜீரணக் கோளாறுகள், வயிற்று உப்புசம், குடற்புண், நெஞ்செரிச்சல், பசியின்மை ஆகிய உடல் உபாதைகள் அனைத்தும் தீரும்.

நவீன மருத்துவத்தில் 'பி-காம்பளக்ஸ்' (B-Complex), ஜெலுசில் (Gelusil) தருகிறார்களே அதைவிடப் பன்மடங்கு பயன்களை இந்த இஞ்சித் தேனூறல் தருகிறது. அதுவும் எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாமல்.

இஞ்சியில் உள்ள கால்சியம் தொடர்ந்து உடலில் சேமிக்கப்பட்டு, உடல் ஊட்டம் பெற்று, முகப் பொலிவு தரும். இயற்கை உணவுக்கு மாற நினைப்பவர்கள் முதலில் இஞ்சியிலி ருந்து ஆரம்பியுங்கள்.

அடுத்து… கடும்பகல் சுக்கு …

சுக்கை இயற்கை உணவாகக் கொள்வது எப்படி....?

'இஞ்சி காய்ந்தால் சுக்கு.....

'சுக்கைப் போல் மருந்தொன்றுமில்லை;

சுப்ரமணியரைப் போல் தெய்வமில்லை'

என்ற பழமொழி முருகக்கடவுளுக்கு இணையானது சுக்கு என்று கூறுகிறது.

பச்சை இஞ்சியின் குணமே காய்ந்த சுக்கிற்கும் உண்டு. பின்வரும் முறையில் சுக்கை உணவாக்கி, உடல் சுத்தி பெறமுடியும்.

சுக்கு - அரை கிலோ

நெல்லிக்காய் சாறு - கால் லிட்டர்

தயிர் - கால் லிட்டர்

பெருங்காயத்தூள் - இருபத்தைந்து கிராம்.

ஒரு பாத்திரத்தில் நெல்லிக்காய்ச் சாறையும், தயிரையும் ஒன்றாகக் கலந்து, அத்துடன் பெருங்காயத்தூளையும் சேர்த்துக் கொள்ளவும். இதில் சுக்கையும் சேர்த்து பாத்திரத்தை ஐந்து நாட்கள் வெயிலில் வைக்கவும்.

சாறு முற்றிலும் சுண்டிய பிறகு, சுக்கை எடுத்து அரைத்துத் தூளாக்கவும். நண்பகலில், உணவுக்குப்பின் இந்தச் சுக்குத் தூளில் அரை ஸ்பூன் (இரண்டு கிராம்) அளவு தொடர்ந்து சாப்பிட்டு வர, சளி, இருமல், ஆஸ்துமா, வயிற்று நோய்கள், நரம்புத் தளர்ச்சி, உடல்பருமன், செரிமானக் கோளாறுகள் போன்றவை போயே போய்விடும்.

நவீன மருத்துவத்தில் ஆஸ்துமா, சளி ஆகியவற்றுக்கு வழங்கப்படும் டெர்பிலின் (Terryphilin) மருந்தைவிடச் சுக்கு பன்மடங்கு பலன் தரும் இயற்கை மருந்து. அதுவும் பக்க விளைவுகள் இல்லாமல்..

கடுக்காயை இயற்கை உணவாகக் கொள்வது எப்படி....?

கடுக்காயைத் தாய்க்கு நிகராய், தாயைவிட மேலாய் ஒரு சித்தர் பாடல் விவரிக்கிறது.

தாய்கூட பாசத்தினால் தன் பிள்ளைக்குப் பிடித்த உணவுகளை அளவுக்கதிகமாய்ச் செய்து கொடுத்து உடலைக் கெடுத்துவிடுவாள். ஆனால், கடுக்காயோ..... தன் சுவையால், உடலைப் பிடித்த நோயை அறவே ஓட்டுகிறது என அந்தப் பாடல் விளக்கமளிக்கிறது.

கடுக்காயை இரண்டாய் உடைத்து, அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிடவும். பின்னர் தூளாக்கி வைத்துக்கொண்டு, அதனைத் தினசரி இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வர, மலச்சிக்கல், இரத்த மூலம், உள்மூலம், வாய்ப்புண், தொண்டைப்புண், நரம்புக்கோளாறுகள், ஆண்மைக்கோளாறுகள் ஆகிய அனைத்தும் குணமாகும்.

அதோடு கடுக்காய் முறையாய் மலச்சிக்கலைச் சரிசெய்கிறது. உடலில் பித்தத்தைத் தணிக்கிறது. நரம்புகளை உறுதிப்படுத்துகிறது. மனதை ஒருநிலைப்படுத்தி, நல்ல முறையில் காரியமாற்ற உதவிபுரிகிறது. ஆக, கடுக்காயைப்போல் உடல் கட்டும், மனக்கட்டுப்பாடும் தரும் இயற்கை உணவு ஏதுமில்லை.

ஒரு தனிமனித அழகு அவனுடைய ஒழுக்க முறை, உணவு முறை இரண்டையும் சார்ந்தே அமையும். இயற்கை உணவுகளை உண்பதால், உடம்பில் சக்தி சேமிக்கப்பட்டு அழகும், இளமைத்தோற்றமும், எல்லோரையும் கவரும் வசீகரமும் வந்துவிடுகிறது.

48 நாளில் ஐஸ்வர்யாராய்போல் வசிகரமாகவும், சிம்ரனைப்போல் சிலிம்மாகவும் மாற முதல்படி இதுதான்!

அசுத்தமாகிக் கிடக்கும் வாட்டர் டேங்கை சுத்தம் செய்வதுபோல், சமைத்த உணவை உண்டு உண்டு பாழ்பட்டுக் கிடக்கும் நம் உடம்பை இந்த மூவரும் (இஞ்சி, சுக்கு, கடுக்காய்) 48 நாளில் சுத்தமாக்கி, நார்மல் நிலைக்குக் கொண்டுவந்து விடுவார்கள்! ஆகவே இதனைக் கருத்திற்கொண்டு அனைவரும் இயற்கை உணவுப் பழக்கத்துக்கு மாறிவிட்டால், சித்தர்களைப் போல் சிரஞ்சீவியாய் வாழலாம்! -

நோயற்ற வாழ்வுதானே சுவையான வாழ்வு? எனவே நோய் நீக்கும் பணிக்கு மருத்துவரை அணுகாமல் நம்மை நாமே நலமாக்கிக் கொள்ள முடியும். இயற்கை உணவுப் பழக்கத்தின் மூலம்! சரி; நோய்களுக்கு மூலம் என்ன?

அதைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் நமது உடல் எவற்றின் சேர்மானம் என்ற உடற்கூறு பற்றிக் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றுக்கும் நாம் மேலே சொன்ன இஞ்சி, சுக்கு, கடுக்காய்க்கும் என்ன உறவு என்று புரிந்துகொண்டால், நீங்கள் இயற்கை உணவுக்கு மாறுவது நிச்சயம்!


ஆரோக்கிய குறிப்புகள் : இயற்கை உணவால் குணத்தை மாற்றலாம் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : Natural food can change the character - Health Tips in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்