நெல்லையப்பர் கோவில் நித்திய பூசைகள்.......

நின்றசீர் நெடுமாறன், சிலிர்ப்பூட்டும் சிற்பங்கள், கல்வெட்டுகள்

[ ஆன்மீகம்: சிவன் ]

Nellaiyapar Temple Eternal Prayers....... - Nehansir Nedumaran, thrilling sculptures, inscriptions in Tamil

நெல்லையப்பர் கோவில் நித்திய பூசைகள்....... | Nellaiyapar Temple Eternal Prayers.......

மன்னன் நெடுமாறன், அம்மை உமையவளிடம் ஞானப்பால் குடித்த ஞான சம்பந்தனின் அருளால், சமண சமயத்தினின்றும் சைவ சமயம் சார்ந்தார். சிவபக்தி முதிர்ந்தவராய் நெல்லையம்பதியில் வந்து தங்கி மனைவி மங்கையர்க்கரசி போற்ற வாழ்ந்தார்.

நெல்லையப்பர் கோவில் நித்திய பூசைகள்.......

அருள் தரும் காந்திமதி அம்பாளுக்குத் தினமும் திருவனந்தல் காலை 6 மணிக்கும், விழா பூசை 7 மணிக்கும், சிறுகால சந்தி 8 மணிக்கும் கால சந்தி 9 மணிக்கும், உச்சி காலம் 12.30 மணிக்கும், சாயரட்சை மாலை 5.30 மணிக்கும், அர்த்த சாமம் இரவு 8.15 மணிக்கும் பள்ளியறை இரவு 9 மணிக்கும் வழிபாடு தீப ஆராதனை நடைபெறும்.

நெல்லையப்பருக்குத் திருவனந்தல் பூசை காலை 6.30 மணிக்கும், விளாபூசை காலை 7.30 மணிக்கும், சிறுகால சந்தி 8.30 மணிக்கும், காலசந்தி 9.30 மணிக்கும், உச்சி காலம் பகல் 12 மணிக்கும் சாயரட்சை மாலை 6 மணிக்கும், அர்த்த சாமம் இரவு 8.30 மணிக்கும் தீபாராதனை இரவு 8.40 மணிக்கும் பைரவர் பூசை 9.30 மணிக்கும் நடைபெறும்.

 

நின்றசீர் நெடுமாறன்

மன்னன் நெடுமாறன், அம்மை உமையவளிடம் ஞானப்பால் குடித்த ஞான சம்பந்தனின் அருளால், சமண சமயத்தினின்றும் சைவ சமயம் சார்ந்தார். சிவபக்தி முதிர்ந்தவராய் நெல்லையம்பதியில் வந்து தங்கி மனைவி மங்கையர்க்கரசி போற்ற வாழ்ந்தார்.

தம் மகன், நண்பர் வேதியர் புதல்வனைப் பெண்ணென்று மறைத்துச் சொல்லியபடியே பெண்ணாகக் கண்டவர். இறைவன் திருவருளால் அவ்வேதியர்க்கு வேறோர் ஆண்மகனை அருளி வைத்தவர். வடபுலத்து அரசனை நெல்லைநாதர் பூதப்படைத் துணையால் வென்று, நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன் எனத் திருத்தொண்டத் தொகையில் சுந்தரரால் பாராட்டப் பெற்றிருப்பவர்.

இவர் இவ்வாலயத்தில் மணிமண்டபம் முதலியன் அனைத்துச் சிறப்பும் செய்திருப்பவர். கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் காலத்திற்குப் பின் வந்த பாண்டியர்கள் சாசனங்களே நம் பார்வைக்குக் கிடைத்துள்ளன. நின்றசீர் நெடுமாறன் நெல்லைநாதன் திருவருளையும், அன்னை காந்திமதியின் பேரருளையும் பெற்றவன்.

 

தனித்தனி பூஜை

நெல்லையப்பர் கோயிலில் சுவாமிக்குத் தனி இராஜகோபுரமும், அம்பாளுக்கு தனி இராஜகோபுரமும் உண்டு. இரண்டு சன்னதிகளையும் மிக நீளமான சங்கிலி மண்டபம் ஒன்று இணைத்து வைக்கிறது. பார்ப்பதற்குத் தனித்தனிக் கோயில்கள் போன்ற உணர்வு ஏற்படும். பொதுவாகக் கோயில்களில் சுவாமி, அம்பாள் இருவருக்கும் ஒரே ஆகமப்படிதான் பூஜை நடக்கும். ஆனால், இங்குக் காந்திமதி அம்பாள் தனிக்கோயிலில் இருப்பதால், காரண ஆகமப்படியும், நெல்லையப்பருக்குக் காமிக ஆகமப்படியும் ஆறு கால பூஜை நடக்கிறது.

 

சிலிர்ப்பூட்டும் சிற்பங்கள்

நெல்லையப்பர் கோவிலில் உள்ள கல் சிற்பங்கள் மிகவும் அபூர்வமானவை. அந்தக் கோவிலுக்குச் செல்லும் போது, அந்தச் சிற்பங்களை நின்று நிதானமாகப் பார்த்து ரசிக்க வேண்டும். அங்குள்ள ஒவ்வொரு சிற்பமும் நம் மூதாதையர்களின் திறமையையும், ரசனையையும் வெளிப்படுத்துவதாக உள்ளன.

இடத்துக்கு ஏற்ப அந்தச் சிற்ப பாவனைகள் இருப்பது நமக்குப் பிரமிப்பைத் தரும். எனவே நெல்லையப்பர் கோவிலுக்குச் செல்லும்போது சிற்பங்களை ரசிக்கத் தவறாதீர்கள். இக்கோவில் முன்மண்டபமாகிய இரண்டு அம்பலங்களும் அலங்கார வேலைப்பாடு அமைந்தவை.

சீபலி மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி முகப்பிலும், சித்திரவேலைப் பாடமைந்த சிற்பத் திறங்களைக் காணலாம். சுவாமி சந்நிதியில் இடப மண்டபத்திற்குத் தெற்கே கற்றூண்களில் விளங்கும் இசையாளர்கள், வீரர்கள் விளங்கும் அருமை கண்டு மகிழத்தக்கவை.

பெரிய கொடி மரத்திற்கு மேற்கே கோவில் முகப்பு மண்டபத்தில் தூண்களில் வீரபத்திரர் முதலிய சிலைகள், கற்சிற்பியின் கைத்திறனுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன. ஈசான திசையில் விளங்கும் பெரிய நடராசப் பெருமானின் செப்பு விக்கிரம், உண்மையில் ஒருவர் ஆடுவது போல் அழகுடன் மனத்தைக் கொள்ளை கொள்ளச் செய்கிறது.

தெற்குப் பிரகாரத்தில் பொல்லாப் பிள்ளையாருக்கு எதிரில் உள்ள பிள்ளைத் தொண்டு, கல்லால் அமைந்திருப்பது செல்பவர் மெய்வலியைச் சோதிக்கவல்லது. மேல் பிரகாரத்தில் கல்லினால் அமைக்கப்பட்ட நடன மண்டபமும், தாமிர சபையும் அதில் மரத்தில் சித்திரித்திருக்கும் சிற்பங்களும், தாமிர சபைக்கு வட பக்கம் நடராசர் சிலை விக்கிரகமும் அரிய வேலைப்பாடுகள் உடையவை.

சிவலோகப் பக்தியில் உள்ள கல்வெட்டுகளும், சுத்தமாகப் பிரதி எடுத்துப் போற்றப்பட வேண்டியவை. கோவிலிலுள்ள கொடி வகைகள் வாகனங்கள் பழமை சிறப்பு டையதாகும். அருகில் உள்ள படத்தைப் பாருங்கள். இது அர்ஜூனனோடு சண்டையிட்ட சிவனின் சிற்பம்.

நெல்லையப்பர் கோவில் உள்ளே நுழையும் போது. கொடிமரத்தைத் தாண்டியதும் உள்ள கோபுரத்தின் கீழ் இருக்கும் நான்கு தூண்களில் ஒன்றில் இந்த சிற்பம் உள்ளது. இந்தச் சிற்பத்தின் எழில் சொல்ல இந்த ஒரு புகைப்படம் போதாது. கொஞ்சம் பக்கவாட்டில் சாய்ந்தும், கொஞ்சம் முன்புறம் குனிந்தும் நிற்கிறார் சிவன்.

அர்ஜூனனோடு முறுக்கிக் கொண்டு நின்றதை சொல்லும் விதமாகச் சிற்பி, சிவனை இப்படி முறுக்கிக் கொண்டு நிற்க வைத்திருப்பாரோ! நான் புரிந்து கொண்ட வரையில் அநேகமாக இந்தச் சிற்பம் தூணோடு சேர்த்து ஒரே கல்லால் ஆனதாகத்தான் இருக்கும். புவிஈர்ப்பு விதிகளின்படி இந்தச் சிற்பம் கொஞ்சம் சிரமமான விஷயம் தான்.

அதைச் சமாளிக்கும் விதமாகத் தான், தூணின் மேற்புறம் கொஞ்சம் பெரியதாக, மேல் தளத்தோடு பொருத்தப்படிருக்கிறது. நாம் குனிந்து நின்றால் நம் கழுத்தில் இருக்கும் சங்கிலி எப்படி இருக்குமோ, அதே போல சிவனின் கழுத்தில் உள்ள மாலை பூமிக்குச் செங்குத்தாகத் தொங்குகிறது. ஒரு மாலை மட்டுமல்ல, மாலை, சங்கிலி என மூன்று இப்படி தொங்குகிறது.

(மெலிதான இவற்றை, உடையாமல் உடலிலிருந்து பிரித்துச் செதுக்குவது சவாலான செயல் தான்). அதே போலத்தான் அவர் கையில் வைத்திருக்கும் அந்த வில்லும். மேலும், பிடிமானம் ஏதுமில்லாமலேயே அந்தரத்தில் நிற்கிறது சிவன் ஏந்தும் வாள். அவர் இடுப்பில் தெரியும் மெல்லிய மடிப்புகள் அவர் ஆரோக்கியத்தைச் சொல்லுகின்றன.

காலில் மூன்று வித அணிகள் அணிந்திருக்கிறார். அதிலும் முழங்காலில் அணிந்திருக்கும் சலங்கை கவனிக்க வைக்கிறது. ஒரு சராசரி மனிதனைவிட உயரமாகவும், நுணுக்கமாகவும், ரசிக்கும்படியும் படைத்திருக்கிறார் சிற்பி. இவர் தொடங்கி உள்ளே நிறைய சிற்பங்கள் ரசிக்கும் படியாக உள்ளன.

குறிப்பாக மேலும் ஆச்சரியம்தரும்படி. இரு சிறு தூண்களுக்கு இடையில் உட்புறத்தில் அணில் சிற்பம் இருக்கிறது. இன்னும் ஆச்சரியம் அந்தச் சிறு தூண்களுக்கு இடையே கல்லால் ஆன பந்து இருக்கிறது. இந்தப் பெரிய தூண் ஒரே கல்லால் செய்யப்படவில்லையோ எனச் சந்தேகிக்கும் அளவிற்கு நுணுக்கமான வேலை.

(ஆனால் ஒன்றுக்கும் மேற்பட்ட கற்கள் என எந்த அறிகுறியும் தெரியவில்லை.) பக்தியோ, கலை ஆர்வமோ. மன்னன் அளித்த வெகுமதியோ காரணம் எதுவாக இருந்தாலும், காலத்தால் அழியாத காவியத்தைக் கற்களில் வடித்த சிற்பிக்கு நாம் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவிக்க வேண்டும்.

 

கல்வெட்டுகள்

கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் மிகப் பழமையானவை சுமார் கி.பி. 950-இல் இருந்த வீரபாண்டியன் சாசனங்கள் ஐந்தாகும். இவை வட்டு எழுத்தில் எழுதப்பட்டவை. அம்பாசமுத்திரம் கல்வெட்டுகள் கூறுவதுபோல் இவையும், பாண்டியர்கள் சோழ மன்னர்களை வென்றதாகச் சொல்கின்றன.

முதலாவது இராசேந்திரன் (கி.பி. 1011-44) முதலாவது குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1074-1118) இவ்விருவர் சாசனங்களினாலும், சோழர்கள் திருநெல்வேலிச் சீமையை வென்றுள்ளது தெரிகிறது.

13ஆவது நூற்றாண்டில் பாண்டியர் பெருமையை நிலைநிறுத்தியதாகச் சொல்லப்படும் முதலாவது மாறவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி. 1216-35) சாசனங்கள் பலவற்றில், இரண்டினில் தாம் சோழர்களை வென்று நாட்டைப் பிடித்துக் கொண்டதாகவும், முடிகொண்ட சோழபுரத்தில் முடிசூடியதாகவும் குறிப்பிடுகிறார்.

இரண்டாவது மாறவர்மசுந்தரபாண்டியன் (கி.பி. 1238-51) தர்மசாசனத்தில் தம் ஹொய்சாலா நண்பர் வீரசோமேசுவர தேவரைக் குறிப்பிடுகிறார். முதலாவது சடாவர்ம சுந்தரபாண்டியன் கர்நாடக நவாப் காலத்தில் மன்னர்கள் வெற்றியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மற்றப் பாண்டிய மன்னர்களில் கி.பி. 1268 முதல் 1308 வரை விளங்கியவன் முதலாவது மாறவர்ம குலசேகர தேவன். கி.பி.1314-21இல் விளங்கியவன் இரண்டாவது மாறவர்ம குலசேகரதேவன். இவர்கள் சாசனங்கள் பல காணப்படுகின்றன.

தென் இந்தியக் கல்வெட்டு வெளியீடாகத் துரைத்தனத்தார் அச்சிட்டுள்ள சாசனங்கள், அறிவிப்புகள் இவற்றைப் பார்ப்பவர்கள் இத்தலம் கீழ்வேம்பு நாட்டுக் குலசேகரச் சதுர்தேவி மங்கலம் என்று அழைக்கப்படுவதுடன், இறைவன் திருநெல்வேலி உடையார் அல்லது உடைய நாயனார் என்றும், இறைவி திருக்காமக் கோட்டமுடைய நாச்சியார் என்றும் குறிக்கப்பட்டிருப்பதைக் காண்பர்.

குலசேகர பாண்டியன் என்பவன் கேரள, சோழ. கொய்சால வேந்தர்களை முறியடித்துக்கொண்டு வந்த பொருளைக் கொண்டு, சுவாமி கோவில் பெரிய பிரகார மதிலை அமைந்துள்ளார் என்பதையும் இக்கோவில் பூஜை முறைகளுக்கு அமுதுபடி, சாத்துப்படி பூ நந்தனம்,விளக்கு எண்ணெய் ஆராதனை முதலியவைகளுக்கு அக்கால பிரபல பாண்டிய வேந்தர்களும், பிற அன்பர்களும் நிலம், பொருள் முதலியன கொடுத்து உதவியிருப்பதைச் சாசனத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

சாசனங்கள் பலவற்றிலும் அக்கால மன்னர்கள் தங்கள் பெருமையைத் தெரிவித்துக் கொள்வதுடன் திருநெல்வேலியில் இருந்து சாசனங்கள் வெளிப்படுத்தி இருப்பது விளங்கும். இதிலிருந்து மிகப் பழமையான காலந்தொட்டு திருநெல்வேலி எத்தகைய சீரும் சிறப்பும் பெற்றிருந்தது என்பது புலனாகிறது.

மதுரை நாயக்க மன்னர் தம் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி நகரையே தங்கள் தெற்குப் பிராந்தியங்களுக்குத் தலைநகராகக் கொண்டிருந்தனர். இதற்கு மூன்று மைல் கிழக்கேயுள்ள பாளையங்கோட்டை. நன்கு பலப்படுத்தப்பட்ட நகரமாய் இருந்தபடியால், அதுவே தலைநகர்கள் கோட்டையாகக் கருதப்பட்டு வந்தது. நவாப் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி தலைநகரமாக விளங்கியது.

 

பசிப்பிணி நீங்கும்

நெல்லையப்பர் கோவிலில் உள்ள காந்திமதி அம்மையை முதல்முறை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும். தலையில் வைர மணிமுடி, இராக்குடி, திருமுகத்தில் வைரப் பொட்டு, மூக்குத்தி, புல்லாக்கு, மார்பில் நவரத்ன வடம், திருவடியில் மணிச்சிலம்பு, உயர்த்திய வலக்கரத்தில் பச்சைக்கிளியுடன் கூடிய செண்டு என, தகதக தங்க ஜரிகையில் பளபளக்கும் பட்டுப் புடவை அணிந்து, எப்போதும் திருமணக் கோலத்தில் காட்சி தரும் நெல்லை காந்திமதியைத் தரிசனம் செய்தாலே, திருமண பாக்கியம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அம்மனே இங்கே தவமிருந்துதான் நெல்லையப்பரை மணம் புரிந்து கொண்டார் என்பதால், திருமண வரம் உறுதியாகக் கிடைக்கும். நெல்லையப்பர் கோயிலின் ராஜகோபுரமே வினோதமான தோற்றத்தைக் கொண்டது. மற்றக் கோயில்கள் போல ஓங்கி, உயர்ந்து காணப்படாமல், உயரமாகக் கட்டிப் பின் மேலேயிருந்து அழுத்தம் கொடுத்துக் கட்டி நெல்லைச் சீமையை ஆண்ட மன்னன், இராமபாண்டியனுக்குச் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி தந்தார்.

உருவத்தைக் குறுக்கி சகஜ அளவுக்கு வந்தார். ஜோதி மயமாய் என்னை நீ முழுவதும் கண்டதால் உன் பெயர் இனி, 'முழுவதும் கண்ட இராம பாண்டியன்' என்று அழைக்கப்படும் என்று ஆசி வழங்கினார். அந்த முழுவதும் கண்ட இராம பாண்டியன் தான், நெல்லையப்பர் கோவிலைக் கட்டினான். நான்கு வேதங்களும் இங்கே மூங்கிலாக இருப்பதாக ஐதீகம். “நான் நடனம் புரியும் 21 தலங்களில் மிகவும் சிறந்த திருநெல்வேலியில் என்னுடனேயே நீங்களும் மூங்கிலாக இருங்கள்" என்று இறைவனே கூறியிருக்கிறார். என்றால், இதன் சிறப்பைச் சொல்லி மாளாது.

மதுரைக்கும், நெல்லைக்கும் ஏராளமான ஒற்றுமை உண்டு. அங்கே வைகை. இங்கே தாமிரபரணி. அங்கே மீனாட்சி ஆட்சி. இங்கே காந்திமதியின் ஆட்சி, இரு நகரங்களுமே கோயிலைச் சுற்றித் திருவீதிகளாக விளங்குகின்றன. மதுரையில் பொற்றாமரைக் குளம் இருப்பதுபோல, இங்கும் பொற்றாமரைத் தீர்த்தம் அமைந்திருக்கிறது! கிழக்கு வாசலில் நுழைந்து, நந்தியையும், சூரியனையும் வணங்கி, மணிமண்டபம் செல்லும்போது அங்கேயுள்ள இசைத்தூணைக் காண மறவாதீர்கள். ஒரே கல்லில் அமைந்த 64 தூண்கள். ஒவ்வொரு தூணைத் தட்டினால் ஒவ்வொரு இசை. கி.பி.7ஆம் நூற்றாண்டில் கூன் பாண்டியன் அமைத்த மண்டபம் இது. நெல்லையப்பரை வணங்கினால் உணவுப்பஞ்சம் தீரும், பசிப்பிணி போகும்.


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

ஆன்மீகம்: சிவன் : நெல்லையப்பர் கோவில் நித்திய பூசைகள்....... - நின்றசீர் நெடுமாறன், சிலிர்ப்பூட்டும் சிற்பங்கள், கல்வெட்டுகள் [ ஆன்மீகம் ] | Spiritual: Shiva : Nellaiyapar Temple Eternal Prayers....... - Nehansir Nedumaran, thrilling sculptures, inscriptions in Tamil [ spirituality ]


தொடர்புடைய வகை








தொடர்புடைய தலைப்புகள்