பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்
தமிழ்நாட்டு திவ்யதேசங்களில் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம் ஆகியவை "பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்கள்' என அழைக்கப்படுகின்றன.
1. கபிஸ்தலம்:
கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் பள்ளிகொண்ட திருமாலை, "ஆற்றங்கரைக் கிடக்கும் கண்ணன், கடல் கிடக்கும் மாயன், உரைக் கிடக்கும் உள்ளத்து எனக்கு!' என்று திருமழிசையாழ்வார் கண்ணனாகவே மங்களாசாசனம் செய்கிறார்.
கபி என்றால் குரங்கு. இங்கு ஸ்ரீஆஞ்சநேயர் கடும் தவம் செய்து பெருமாளின் தரிசனம் பெற்றார் எனவே "கபிஸ்தலம்' என அழைக்கப்பட்டது. சுவாமிமலையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
2. திருக்கோவிலூர்:
ஆழ்வார்கள் முதன்முதலாகப் பாடிய இத்திவ்ய தேசத்தை "கிருஷ்ணன் கோயில்' என்றே வடமொழிநூல்கள் குறிக்கின்றன. 'தட்சிண பினாகினி' எனப்படும் தென்பெண்ணை ஆற்றங்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.
கள்ளக்குறிச்சியிலிருந்து 46 கி.மீ. தொலைவில் திருக்கோவிலூர் அமைந்துள்ளது.
3. திருக்கண்ணங்குடி:
திருமால் ரிஷிகளுக்கு காட்சி கொடுத்து அருள நினைத்தார். வசிஷ்டர், இளகாத வெண்ணையால் கிருஷ்ண விக்கிரகம் செய்து மற்ற ரிஷிகளுடன் சேர்ந்து வணங்கிக் கொண்டிருந்தார். கிருஷ்ணர், வசிஷ்டரை சோதிக்க குழந்தையாக வந்தார். வசிஷ்டர் பூஜித்த வெண்ணெய்க் கண்ணனை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு ஓடினார்.
பதறிய வசிஷ்டர் துரத்த, கோயிலில் உள்ள மகிழ மரத்தடியில் சென்று பதுங்கினார். அங்கு தவம் செய்த மகரிஷிகள் கிருஷ்ணனென்று அறியாமல் அவரை தாம்புக் கயிற்றால் கட்டிப்போட்டு தங்க வைத்தனர். கண்ணனை குடிகொள்ளச் செய்ததால் இத்தலத்திற்கு "திருக்கண்ணங்குடி' என்று பெயர் வந்தது.
இத்திருத்தலம், நாகப்பட்டினம்- திருவாரூர் சாலையில் சிக்கலுக்கும் - கீவளூருக்குமிடையில் ஆழியூர் என்னும் சிறிய ஊரின் அருகே அமைந்திருக்கிறது.
4. திருக்கண்ணமங்கை:
திருமால் பாற்கடலைக் கடைந்த போது இறுதியில் மஹாலட்சுமி தோன்றினாள். பாற்கடலைக் கடைந்த நிலையில் இருந்த பெருமாளின் தோற்றம் கண்டு, மிகவும் நாணமுற்ற திருமகள், இத்தலத்திற்கு வந்து எம் பெருமாளைக் குறித்து மெளனத் தவம் இருந்தாள்.
மஹாலட்சுமியை அடைய எம்பெருமான் தன்னுடைய பாற்கடலை விட்டுப் புறத்தே வந்து இங்கு எழுந்தருளியதால் "பெரும்புறக்கடல்' என்பதே பெருமாளின் திருநாமம் ஆயிற்று.
கிருஷ்ணருக்கு திருமணம் நடைபெற்றதால் "கிருஷ்ண மங்கள க்ஷேத்ரம்' என்பர்.
திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 6 கி.மீ. தொலைவில் திருக்கண்ணமங்கை திருத்தலம் அமைந்துள்ளது.
5. திருக்கண்ணபுரம்:
108 திவ்ய தேசங்களுள் கீழை வீடு என்பது திருக்கண்ணபுரம் ஆகும். இது கண்ணனின் கீழ்ப்புறத்து வீடாகக் கருதப்படுகிறது. இத்தலத்தினை, பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாடியுள்ளனர்.
பெருமாள் கருவறையில், ஸ்ரீ தாமோதர கண்ணனாக தனி சந்நிதி கொண்டிருப்பதைத் தவிர, இவ்வூர் முழுவதும் கண்ணன் தவழ்ந்து விளையாடியதால் இது "கண்ணன்புரம்' எனவும் வழங்கப்படுகிறது.
திருவாரூரிலிருந்து 19 கி.மீ. தொலைவில் திருக்கண்ணபுரம் திருத்தலம் அமைந்துள்ளது. கோயில் வாசல் வரை பேருந்துகள் வந்து செல்கின்றன.
எவ்விதப் பிரார்த்தனையும் கைகூட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இத்தலங்களில் பெருமாளுக்கு பழம் மட்டும் வைத்து நிவேதனம் செய்தால் வேண்டியது கிடைக்கும் என பலனடைந்தவர்கள் சொல்கிறார்கள்.
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.
- தமிழர் நலம்