ஸ்ரீ ராமஜெயம்

நாடி சாஸ்திரம் கூறும் நாமக்கல் ஆஞ்சநேயர் ரகசியங்கள்!

[ ஆஞ்சநேயர்: வரலாறு ]

Sri Rama Jayam - Namakkal Anjaneyar secrets that Nadi Shastra tells! in Tamil

ஸ்ரீ ராமஜெயம் | Sri Rama Jayam

உயர்வு தருவான் நாமக்கல் வாயு மைந்தன்! வாயு மைந்தன், சிந்தையில் பெரியோன், சமயோசித புத்தியில் இமயம், நவ வ்யாகரண பண்டிதன், நித்ய சிரஞ்சீவி என்றெல்லாம் அயோத்தி அரசன், ராமச்சந்திர மூர்த்தியால் புகழப்பட்டவர், அனுமன்.

ஸ்ரீராமஜெயம்

 

நாடி சாஸ்திரம் கூறும் நாமக்கல் ஆஞ்சநேயர் ரகசியங்கள்!

 

உயர்வு தருவான் நாமக்கல் வாயு மைந்தன்!

 

வாயு மைந்தன், சிந்தையில் பெரியோன், சமயோசித புத்தியில் இமயம், நவ வ்யாகரண பண்டிதன், நித்ய சிரஞ்சீவி என்றெல்லாம் அயோத்தி அரசன், ராமச்சந்திர மூர்த்தியால் புகழப்பட்டவர், அனுமன்.

 

இவருடைய உடல் வஜ்ரம்போல் உறுதி மிக்கது. அவருடைய மனஉறுதியும் அத்தகையதே.

 

நித்ய ப்ரம்மச்சாரி, பக்திக்கு இருப்பிடம், சேவைக்கு உறைவிடம் என்றெல்லாம் இந்திரனாலேயே புகழப்பட்ட மகான் இன்றும் நம் கண்ணிற்கு தெரியாது நம்முடனேயே சஞ்சரித்து வரும் திவ்ய மூர்த்தியாம் ஆஞ்சநேயர், பற்பல இடங்களில் கோயில் கொண்டுள்ளார்.

 

ஆனாலும் முனிவர்களினாலும் சித்தர்களினாலும் தொழப்படும் புண்ணிய க்ஷேத்திரங்களுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று ரிஷிகளினிடையே பேசப்படுவது நாமக்கல்தான்.

 

ஏனெனில் நேபாளத்தில் இருந்து ஆஞ்சநேயரால் எடுத்துவரப்பட்ட சாளக்கிராம மலைதான் இந்த நாமக்கல் மலை.

 

பட்டாபிஷேகம் முடிந்தபின், ராமர் அனுமனை அழைத்து, தன் வெற்றிக்காக அனுமன் உழைத்ததை பாராட்டி பல அன்பளிப்புகள் தந்தார்.

 

அவருடைய பற்றற்ற சந்நியாசி உள்ளத்தை உணர்ந்து, மான் தோலை இடையில் தரிக்கச் செய்தார்.

 

திருமகள் அம்சமான ஜானகி தேவியின் அருள் பெற்றமையால், பொன் ஆபரணங்களையும் கைவிரல்களில் மோதிரங்களையும் அணிவித்தார்.

 

தாமரை மலர்களால் மக்கள் அவருடைய திருவடிகளை வணங்கினர்.

 

பிறகு ஸ்ரீராமபிரான், ‘‘ஆஞ்சநேயா, இப்படியே நீ சென்று, வடதிசையில் இருக்கும் சாளக்கிராம மலையை எடுத்து, எனது வெற்றிக்கு உறுதுணையான, எனது உபாசனா மூர்த்தியான லட்சுமி நரசிம்மனுக்கு, புனித பாரதத்தின் புண்ணிய தெற்கு பகுதியில் ஒரு கோயில் எழுப்பு’’என்றார்.

 

அப்படியே அனுமன் செய்ய, இன்று நாமக்கல்லில் இருக்கும் லட்சுமி நரசிம்ம மலைக் கோயில் தோன்றிற்று.

 

இங்கு திருமகள் நித்யவாசம் செய்கிறாள்.

 

எனவே இங்குள்ள தலத்தில் தங்கத்தினும் அதிக மதிப்பு வாய்ந்த பிளாட்டினம் தாதுக்கள் நிறைய அளவில் படிமங்களாக கிடக்கின்றன.

 

மற்றும் வைரம், தங்கம், செம்பு போன்ற ரத்தினங்களும் உலோகத் தாதுக்களும் ஏராளமாக இருக்கின்றன என்கிறது நாடி சாஸ்திரம்.

 

இங்கு உள்ள ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மரை தரிசித்தபடியே நின்றுகொண்டு தியான பரவச கோலத்தில் இருக்கின்றார்.

 

இந்த ஆஞ்சநேயர், 18 அடி உயரம்.

 

இந்த அனுமன் தானே உருவான ஸ்வயம்பு என்கிறார் அகஸ்தியர்.

 

அவருடைய விழிகள் அழகாக விரிந்து பார்வை நேராக இருக்கிறது.

 

அனுமனின் பார்வை லட்சுமி நரசிம்மரின் பாதங்களில் பதிந்து இருக்கிறது.

 

ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மரை 250 அடி தொலைவில் இருந்து பாத தரிசனம் செய்து ஆனந்த கோலத்தில் நிற்கின்றார்.

 

கமலாலய புஷ்கரணி படிகளில் அனுமன் பாதம் இன்றும் விளங்குகிறது.

 

பெரிய ஆபத்து, பேரிடர், பேரழிவு என ஏதும் பூமியை தாக்காமல் காத்துக்கொண்டு நிற்கிறார்.

 

தல பெருமைகள் :

 

இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை மிகவும் பிரம்மாண்டமானது. பீடத்திலிருந்து 22 அடியும்இ பாதத்திலிருந்து 18 அடியும் உயரம் கொண்டதாக உள்ளது.

 

இங்குள்ள ஆஞ்சநேயர் முகம் மிகவும் அழகாக தேஜஸ் உள்ளதாக இருப்பது மிக முக்கியமான சிறப்பம்சம்.

 

தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோவில்.

 

எதிரே உள்ள லட்சுமி நரசிம்மர் ஆலயத்தின் உப கோவில்தான் இந்த ஆஞ்சநேயர் சன்னதி என்றாலும் இச்சன்னதியில்தான் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

 

இச்சா சக்தி (நாமகிரி அம்மன்) கிரியாசக்தி (நரசிம்மர்) ஞானசக்தி (ஆஞ்சநேயர்) ஆகிய மூன்று சக்திகளும் ஒருங்கே அமையப்பெற்ற கோவில் இது.

 

இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தை தொழுதபடி இருக்கிறார்.

 

மிக பிரம்மாண்டமாக காற்று மழை வெயில் இவைகளை தாங்கிக் கொண்டு திறந்த வெளியில் தொழுத கைகளோடு நின்றிருக்கிறார்.

 

முன்பு ஒருசமயம் நவகிரகங்களில் அதிக குரூரமான ராகுவும் சனியும் ஸ்ரீஆஞ்சநேயரிடம் தோல்வியுற்றதனால் ஆஞ்சநேயருக்கு கீழ்ப்படிந்தார்கள்.

 

பூவுலகில் மாந்தர்களுக்கு சனியாலும் ராகுவாலும் ஏதேனும் இடையூறு ஏற்படின் அவர்களை திருப்திபடுத்துவதின் பொருட்டு ராகுவுக்கு பிடித்த உளுந்தும் சனிக்கு பிடித்த எள்எண்ணெய்யாலும் செய்த வடைமாலையை ஸ்ரீஆஞ்சநேயருக்கு சாத்தி வழிபட்டால் சனி ராகு இவர்களுடைய இடையூறிலிருந்து மனிதர் விடுபடுகிறார்கள் என்பதற்காகவே தான் ஸ்ரீஆஞ்சநேயருக்கு 

வடைமாலை சாத்துகிறார்கள்.

 

இவருக்கு திகம்பர ஆஞ்சநேயன் என்றும் பெயர்.

 

வானமே கூரை என்பதும் கூரை என்பது இல்லாத ஆஞ்சநேயர் கோயில் என்றும் பொருள்.

 

தாமரைப் பாதங்களை உடைய இவரை அமாவாசையன்று அபிஷேகம் செய்து ஆராதிப்பவர்களுக்கு குறைவிலா செல்வம் சேரும்.

 

வாணிபம் விருத்தி அடையும்.

 

இளைஞர்கள் 48 நாட்கள் சித்திரை பௌர்ணமி தொட்டு புலால், மது, மாது போன்ற லாகிரிகளையும் கேளிக்கைகளையும் விலக்கி, ‘ஓம் நமோ அனுமதே நமஹ’ என 1008 முறை நாள் ஒன்றுக்கு ஜபம் செய்து வந்தால் நல்ல வேலை கிடைக்கும்.

 

சுகமான வாழ்க்கை பெறுவார்கள்.

 

ஆரோக்யமான வாழ்வு பெரியோர்களுடன் மகிழ்ச்சியான உறவும் சொந்தங்களிடையே நல்லுறவும் உண்டாகும்.

 

விபத்து ஏற்படாமல் காப்பார் மாருதி என்கிறது நாடி சாஸ்திரம்.

 

‘வைகுண்டத்திற்கு நீ வராதே. பூமியிலேயே இருந்து, தவறாது பக்தியும் சகிப்புத் தன்மையும் கொண்டு யார் வாழ்கின்றனரோ அவர்கள் அருகே அவர்கள் கேட்காமலேயே நீ சென்று அவர்தம் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப காரியங்களை வெற்றியாக்கு’ என்று ராமர் கட்டளை இட்டு சென்றுள்ளார்.

 

எல்லோருக்கும் முக்தியும் மோட்சமும் கிட்ட, ஆஞ்சநேயர் உழைக்கின்றார்.

 

வல்வில் ஓரி என்ற கடையேழு வள்ளல்களில் ஒருவர். தனக்கு வந்த புற்று நோய்க்கு இந்த நாமக்கல் ஆஞ்சநேயரை தொழுது நிவாரணம் பெற்றார்.

 

மகேந்திர பல்லவன் என்ற மன்னர் வெற்றி மேல் வெற்றி பெறவும் பல்லவ சாம்ராஜ்யம் நிலை பெறவும் இந்த  அனுமன் மீதான பக்தியே காரணம்.

 

பேய், ஏவல், சூன்யம் போன்ற தொந்தரவு நீங்கிட, இந்த ஆஞ்சநேயருக்கு இளநீர், வெண்ணெய், வடை, வாழைப்பழம், நைவேத்யம் செய்து, 18 அமாவாசைகளில் விநியோகம் செய்தால் கண்டிப்பாக நல்ல நிவாரணம் கிட்டும்.

 

திருமணத் தடை நீங்கிட மார்கழி அமாவாசையில் 

பானக நைவேத்யம் செய்து அதிகாலையில் பஜனை பாடி வருவோர்க்கு விநியோகம் செய்ய தடை நீங்கும் என்கிறார் அகஸ்தியர்.

 

இந்த ஆஞ்சநேய மூர்த்தி, வளர்ந்து வருகின்றார் என்பது உண்மை.

 

ஒருமுறை திப்பு சுல்தான் இந்த கோயிலுக்கு வந்து தொழுது சென்றார்.

 

அப்போது கோயிலுக்கு கூரை அமைக்க ஆணையிட்டார்.

 

அனுமன் அவர் கனவில் சென்று, ‘எனது உபாசனா மூர்த்தியாம் லட்சுமி நரசிம்மரே கூரையின்றி கோயில் கொண்டிருக்கின்றார்.

 

எனவே நானும் அவரை ஒப்ப கூரை இன்றியே இருக்க விரும்புகிறேன்’என கூறினார்.

 

அன்று முதல் தன் அரசு செலவில் ‘ஆஞ்சநேய ஜெயந்தி’ தினத்தில் அபிஷேகம், அன்னதானம் போன்றவற்றை செய்து வெற்றிமேல் வெற்றியை பெற்றான் திப்பு சுல்தான்.

 

டைகர் சுல்தான் என்றும் இதன் பின்னரே புகழ் பெற்றான்.

 

அரசியலில் செல்வாக்கைத் தக்க வைக்கவும், அரசியலில் உயர்ந்த பதவி அடைய எண்ணுபவர்களும்  நாமக்கல் சென்று மாலை வேளைகளில் 12 சனிக்கிழமைகள் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்தி பூஜித்து வந்தால் சித்திக்கும் என்கிறது நாடி.

 

விபீடணன், கருடன், நாகன், நீலன், சனி, கேது, சிவன் இந்திரன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்ட திவ்ய மூர்த்தி இவர்.

 

தனது அபிலாஷை எதுவாயினும் முறைப்படி இவரை தொழுதால் கூடியிருந்து நிறைவேற்றி தருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது அகஸ்தியர் வாக்கு:

 

‘நாடியது கை கூடும் 

நன்மை யாவுஞ் சேரும் 

தன மானது தானே சேரும் 

தன் எண்ணமெல்லாமீடேறும் 

பகைவர் பயந்து ஓடுவர் 

பாவங்களும் தோஷங்களும் கருகும் 

முன்னை வினையும் இம்மை 

ஏவலுஞ் சூனியமும் தவிடு பொடியாகுமே சாலக்ராம மலையடி நிற்குமவ் 

வாயு மைந்தரை கூடிடவே

 

பண வரவு தரும் அனுமன் மந்திரங்கள்.

 

ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா

 

- என்ற இந்த மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும்.

 

ஓம் ஹ்ரீம் உத்தரமுகே, ஆதிவராஹாய, பஞ்சமுகி 

ஹனுமதே, லம்லம்லம்லம் 

*ஸகல ஸம்பத் 

கராய ஸ்வாஹா.

 

என்ற இந்த மந்திரத்தை வீட்டில் அல்லது ஹனுமன் சன்னதியில் அமர்ந்து ஜபித்து வந்தால் செல்வ வளம் பெருகும்.

 

ஹனுமன் சன்னிதிக்குச் செல்ல முடியாதவர்கள் அதற்கு மாற்றாக அரசமரத்தை அனுமனாக நினைத்தும் அரச மரத்தடியில் அமர்ந்து இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம்.

 

இப்படி செவ்வாய்க்கிழமை அன்று வரும் வளர்பிறையில் இந்த மந்திரத்தை ஒருமுறை மனமார வழிப்பட்டு உச்சரித்து வந்தாலே இருக்கின்ற பல கஷ்டங்கள் தீர்ந்து செல்வ செழிப்பு உண்டாகும்.

 

இந்த மந்திரங்களை 108 முறை உச்சரிக்க முடியாதவர்கள் 

48 முறை உச்சரித்தால் போதுமானது.

 

மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது பொதுவாகவே மனம் ஒரு நிலைப்பட்டு இருக்க வேண்டும்.

 

அலை பாயக்கூடாது.

 

இறை சிந்தனையில் முழுமையாக மூழ்கி இருக்க வேண்டும்.

 

உண்மையான பக்திக்கு என்றுமே ஹனுமன் அருள் புரிவார் .

ஆஞ்சநேயர்: வரலாறு : ஸ்ரீ ராமஜெயம் - நாடி சாஸ்திரம் கூறும் நாமக்கல் ஆஞ்சநேயர் ரகசியங்கள்! [ ] | Anjaneya: History : Sri Rama Jayam - Namakkal Anjaneyar secrets that Nadi Shastra tells! in Tamil [ ]