புளியோதரை

தேவையான பொருட்கள், செய்முறை

[ சமையல் குறிப்புகள் ]

Tamarind - Ingredients, recipe in Tamil

புளியோதரை | Tamarind

நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.

புளியோதரை

 

நேரம் கிடைக்கும் பொழுது இந்தப் புளிக்காய்ச்சலையும், புளியோதரைப் பொடியையும் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். சரியான பக்குவத்தில் தயாரிக்கப் பட்டால் இவை ஆறு மாதங்கள் ஆனாலும் கெடாது.

 

தேவையான பொருள்கள்:

 

புளிக்காய்ச்சல் தயாரிக்க

புளி – 150 கிராம்

காய்ந்த மிளகாய் – 15

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

கல் உப்பு- தேவையான அளவு

நல்லெண்ணை – 1/2 கப்

 

புளியோதரைப் பொடி தயாரிக்க

காய்ந்த மிளகாய் – 15லிருந்து 20

தனியா – 3 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

கட்டிப் பெருங்காயம் – சிறு துண்டு

 

புளியோதரை கலக்க

உதிராக வடித்த சாதம்

புளிக்காய்ச்சல்

புளியோதரைப் பொடி

மஞ்சள் பொடி

நல்லெண்ணை

பச்சைக் கருவேப்பிலை

நிலக்கடலை

வெந்தயம்

கடலைப் பருப்பு

உளுத்தம் பருப்பு

முந்திரிப் பருப்பு

வெள்ளை எள்

 

செய்முறை:

 

புளிக்காய்ச்சல்:

 

முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து, உப்பு சேர்த்துக் கரைத்து, வடிகட்டவும்.

அடுப்பில் வாணலியில் நல்லெண்ணை விட்டு, முழு மிளகாய் வற்றலை நன்கு வறுத்து, பின், கடுகு, சீரகம் பொரித்து புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும்.

அடுப்பை சிம்மில் வைத்து, நிதானமாகக் கொதிக்கவிட்டு, நன்கு கிளறிவிட வேண்டும்.

பாதி கொதிக்கும்போது பச்சை வெந்தயத்தையும் சேர்க்கவும்.

தளதளவென சப்தத்துடன் கொதித்து இறுகி, எண்ணை மேலே வரும் சமயம் புளிக்காய்ச்சல் தயார். அடுப்பை அணைத்து, நன்கு ஆறியவுடன், பாட்டிலில்* எடுத்துவைக்கவும்.

புளியோதரைப் பொடி:

 

அடுப்பை சிம்’மில் வைத்து வெறும் வாணலியில் வெந்தயத்தை சிவக்க வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சிறிது எண்ணை விட்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுக்கவும்.

அதிலேயே காய்ந்தமிளகாய், தனியாவை நன்கு வறுத்து எடுக்கவும்.

ஆறியதும், எல்லாச் சாமான்களையும் மிக்ஸியில் நைசாகப் பொடித்து எடுத்துவைக்கவும்.

புளியோதரை கலக்கும் விதம்:

ஒரு பெரிய தாம்பாளத்தில் நன்கு சூடான, உதிர் உதிராக வடிக்கப்பட்ட சாதத்தை பரவலாகக் கரண்டியால் எடுத்துப் போடவும்.

அதன்மீது மஞ்சள் பொடி, பச்சைக் கறிவேப்பிலையைப் பரவலாகத் தூவி, நல்லெண்ணையையும் பரவலாகச் சேர்த்து அப்படியே நன்கு ஆறவிடவும்.

பின், தேவையான புளிக்காய்ச்சலை சாதத்தில் போட்டு, சாதம் குழையாமல் உடையாமல் மெதுவாகக் கரண்டியால் அல்லது கைவிரல்களால் (கையால் அல்ல) கலக்கவும்.

எண்ணையில் நிலக்கடலை, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், முந்திரிப்பருப்பு, எள் வறுத்து புளியோதரையில் சேர்க்கவும்.

கடைசியில் திட்டமான அளவு, புளியோதரைப் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும்.

எள், தாளிக்கும்போது சேர்க்காமல், வறுத்து, பொடித்தும் கடைசியில் சேர்த்தால் மிகுந்த வாசனையோடு சுவையாக இருக்கும்.

உப்பு, சர்க்கரை, ஊறுகாய் மற்றும் உப்போ சர்க்கரையோ சேர்த்த மசலாக்களை பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் டப்பாக்களில் வைப்பது உடலுக்குத் தீங்கானது. இவைகளை எப்பொழுதும் கண்ணாடி பாட்டில்களிலேயே வைக்கவும். உள்ளேயே ஸ்பூன் போட்டு வைப்பதாக இருந்தால் மர ஸ்பூன் மட்டுமே உபயோகிக்கவும்.

 

மேட்ச் ஃபிக்சிங் கார்னர்:

பொரித்த அப்பளம், வடாம், சிப்ஸ் வகைகள், மெலிதாகத் தட்டப்பட்ட உளுந்து வடை (ஆஞ்சநேயர் கோயில் வடைமாலை)


மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம். நன்றி. வணக்கம்.

- தமிழர் நலம்

சமையல் குறிப்புகள் : புளியோதரை - தேவையான பொருட்கள், செய்முறை [ ] | cooking recipes : Tamarind - Ingredients, recipe in Tamil [ ]