
ஒரு சிறுவனுக்கு வாழைப்பழம் ஒன்று கிடைத்தது. தெரிந்தவர் அவனுக்கு அளித்து, 'சாப்பிடு' என்று கொடுத்தார்.
தானம் எப்படி இருக்க வேண்டும்?
❣ ஓம் நமசிவாய 🙏🙏
❣ ஒரு சிறுவனுக்கு வாழைப்பழம் ஒன்று கிடைத்தது. தெரிந்தவர் அவனுக்கு அளித்து, 'சாப்பிடு' என்று கொடுத்தார்.
❣ சிறுவன் பழத்தை வாங்கிக் கொண்டான். பழத்தைத் தொட்டுப் பார்த்ததுமே சற்று 'கொழ கொழ' வென்று இருந்ததால், அதை அவன் சாப்பிட
விரும்பவில்லை.
❣ அந்தப் பழத்தை, அப்பாவிடம் கொடுத்தான்.
"நீ சாப்பிடு, உனக்குத்தானே கொடுத்தார்.?" என்றார் அவனுடைய அப்பா.
❣ "எனக்கு இப்பொழுது வேண்டாம். நீங்கள் சாப்பிடுங்கள்" என்றான் சிறுவன்.
❣ சிறுவனின் தந்தை பழத்தைப் பார்த்தார். பழம் சாப்பிடும் படியான நிலையில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டார். மனைவியை அழைத்தார்.
❣ "இந்தப் பழத்தைச் சாப்பிடு. நானே சாப்பிடுவேன். ஆனால் எனக்கு பசியில்லை" என்று கூறி மனைவிக்கு அப்பழத்தை தானம் செய்தார்.
❣ மனைவி பழத்தைச் சாப்பிடலாம் என்று தான் கையில் வாங்கிக் கொண்டாள். வாங்கிய பிறகுதான் பழம் மிகவும் பழுத்துவிட்டது என்பதை அறிந்தாள். தோலை
உரித்துப் பார்த்தால் ஒரு வேளை அது அழுகிய பழமாகவும் இருக்கக் கூடும் என்று
எண்ணினாள்.
❣ அதனால் அவள் அப்பழத்தை உரிக்காமலே, இதை யாருக்கு
கொடுக்கலாம் என்று யோசித்தாள். அப்போது வீட்டு வேலை செய்யும் வேலைக்காரப் பெண்
வந்தாள்.
❣ "வேலாயி, இங்க வா, ரொம்ப களைப்பா இருக்கிறாயே, இந்தா இந்தப் பழத்தைச் சாப்பிடு" என்று கையில்
இருந்த வாழைப்பழத்தை அவளிடம் தந்தாள்.
❣ பழத்தைப் பெற்றுக்கொண்ட வேலைக்காரி, அதைத்தின்ன முடியாது என்பதை அறிந்து கொண்டாள். எஜமானி கொடுத்ததை
வேண்டாம் என்று சொல்லத் தயக்கமாக இருந்ததால் கொடுத்ததை வாங்கிக் கொண்டாள்.
❣ பிறகு வாசல்பக்கம் சென்றாள். பழத்தைத் தூக்கிப் போட்டுவிடலாம் என்ற எண்ணத்தில்தான் வாசற்பக்கம் வேலாயி வந்தாள். அப்போது தெருவில் பால்காரன் பசுமாட்டுடன் சென்றதைப் பார்த்தாள்.
❣ அழுகிய பழத்தைத் தின்னமுடியாமல் தூக்கிப் போடுவதை விடவும், பசுவுக்கு அளித்தால்
புண்ணியம் கிடைக்குமே என்று நினைத்தாள். பழத்தைக் கொண்டு போய் பால்காரனிடம்
கொடுத்து,
"பசுவுக்கு
இதைக் கொடுத்துவிடு" என்றாள்.
❣ பால்காரன் பழத்தை வாங்கினான். “ஏம்மா, அழுகிய இந்தப் பழத்தைச்
சாப்பிட்டால் பசுவுக்கு ஒத்துக்கொள்ளாது” என்று கூறி குப்பைத் தொட்டியில்
விட்டெறிந்தான்.
❣ பழம் நல்ல நிலையில் இருந்தால் சிறுவனே அதைச் சாப்பிட்டிருப்பான். நன்றாக இல்லை என்று தெரிந்ததால் தான் சிறுவன் அப்பாவுக்கும், அப்பா அம்மாவுக்கும், அம்மா வேலைக்காரிக்கும், வேலைக்காரி பசுவுக்கும் தானம்
செய்தார்கள்.
❣ தனக்குத் தேவையற்றது என்று நினைப்பதை, தனக்கு உதவாது என்று
தோன்றியதை பிறருக்குக் கொடுப்பதற்குப் பெயர் தானமல்ல என்பதைப் புரிந்துகொள்ள
வேண்டும்.
❣ஓம் நமசிவாய 🙏
மற்றும் ஒரு ஆரோக்யமான சிந்தனையுடன் நல்லதொரு தகவலை பதிவிடுவோம்.
- தமிழர் நலம்
ஆன்மீக குறிப்புகள் : தானம் எப்படி இருக்க வேண்டும்? - வாழைப்பழம் [ ] | Spiritual Notes : What should the donation look like? - Banana in Tamil [ ]