நீங்களும் ஐஸ்வர்யாராய் ஆகலாம்

ஆரோக்கிய குறிப்புகள்

[ ஆரோக்கிய குறிப்புகள் ]

You too can become Aishwarya (Beauty) - Health Tips in Tamil

நீங்களும் ஐஸ்வர்யாராய் ஆகலாம் | You too can become Aishwarya (Beauty)

பத்து வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவில் தன் உடல் அழகையும், உடல் அமைப்பையும் பார்க்கும் முப்பதைக் கடந்த பெண்களும் இப்படித்தான் யோசிக்கிறார்கள்.

நீங்களும் ஐஸ்வர்யாராய் ஆகலாம்

 

உடல் பருமனை எளிமையான வழியில் குறைக்க ஏதேனும் மருந்து உள்ளதா? உடல் பருமனை மருந்தே இல்லாமல் குறைக்க முடியுமா? காலையில் வாக்கிங்சென்றால் உடல் பருமன் குறையுமா? பத்து வருடத்திற்கு முன் இருந்த எடைக்குக் குறைய இயலுமா? - இப்படி அடுக்கடுக்கான கேள்விகளுடனும், யோசனையுடனும் உடல் பருமனாகிவிட்டவர்கள் யோசிக்கிறார்கள். “எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...” என ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள்....

பத்து வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவில் தன் உடல் அழகையும், உடல் அமைப்பையும் பார்க்கும் முப்பதைக் கடந்த பெண்களும் இப்படித்தான் யோசிக்கிறார்கள்.

உடல் பருமனைப்பற்றி யோசித்தால் மட்டும் போதுமா...? அதற்கான முயற்சியிலும் ஈடுபடவேண்டுமே...! ஈடுபடவும் தயார். ஆனால் உடல் எடையை எப்படிக் குறைப்பது...?

வாருங்கள். இயற்கை மருத்துவம் வழிகாட்டுகிறது. இப்படி இருக்கிற நீங்கள் அப்படி ஆகிவிடலாம். பத்து பைசா செலவில்லாமல்,

உங்கள் உடல் எடையைசிக்கென்று வைத்துக் கொள்ள, நீங்கள் எடுக்கும் உணவையே மருந்தாக்கும் ரகசியத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்! அந்தச் சிதம்பர ரகசியம் இதுதான்.

முதலில் உடல் எடை அதிகரிப்பின் காரணத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். உடல் எடை கீழ்கண்ட காரணங்களால் அதிகரிக்கலாம். அவை என்ன?

1. அளவுக்கதிகமாய்ச் சாப்பிட்டால் அந்த உணவுகளில் உள்ள கலோரியானது தேவைக்குப் போக, உடம்பில் அதிகளவில் சேமிக்கப்படுகிறது. இதனால் உடல் பருமன் உண்டாகிறது.

2. உடலில் இரத்தச் சிவப்பணுக்கள் குறைந்த நிலையில் உடல் பருமன் உண்டாகிறது.

3. சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு எடுக்கப்படும் நவீன மருந்துகளின் பின்விளைவுகளினால் உடல் பருமன் உண்டாகிறது.

4. தைராய்டு கோளாறுகளினால் உடல் பருமன் உண்டாகிறது.

5. வாயுக்கோளாறுகள், நாள்பட்ட மலச் சிக்கலினால் உடல் பருமன் உண்டாகிறது.

6. பெண்களுக்கு மாதவிடாய் முறையாக வராமல் இருப்பது, குறைந்த அளவில் வெளியேறுவது, கருப்பை சார்ந்த கோளாறுகள் இருப்பது போன்ற காரணங்களால் உடல் பருமன் உண்டாகிறது.

இவை மருத்துவம் சார்ந்த காரணங்கள். இது இல்லாமல் தொடர்ந்து டி.வி. சீரியல் பார்க்கும் அம்மணிகளுக்குக்கூட உடல் எடை அதிகரிப்பதாகச் சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஒருவர் உடலில் கொழுப்புச் சத்து அதிகரித்த நிலையில் உடல் பருமனுக்கு உள்ளாகியுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அவருடைய உடல் பருமனை எப்படிக் குறைப்பது....?

முதலில் அவருக்கான உணவுப்பழக்கத்தை ஒழுங்கு செய்ய வேண்டும். அவர் விரும்பி உண்ணும் உணவுகளைப் பட்டியலிட வேண்டும். அவர் உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்தை முறைப்படுத்த வேண்டும். அவர் உண்ண வேண்டிய உணவுகளை வகைப்படுத்த வேண்டும். தவிர்க்கவேண்டிய உணவுகளைப் பட்டியலிட்டு பின்பற்ற வேண்டும்.

 

உடல் பருமன் குறைய கீழ்கண்ட உணவுகளைக் கட்டுப்படுத்துங்கள்

• கடலை எண்ணெய், கடலைப்பருப்பு, வடை, போண்டா, பஜ்ஜி, சிப்ஸ் மற்றும் எண்ணெயில் வறுத்தெடுத்த பதார்த்தங்கள். 'பொடோ போட்டு ஒதுக்கப்பட வேண்டியவை!

• கோழி - மட்டன்- மாட்டுக்கறி, இறால் போன்ற அசைவ உணவுகள். பக்கம் எட்டியே பார்க்கக் கூடாது.

• உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேனைக்கிழங்கு போன்ற கிழங்கு வகைகள். கண்ணிலேயே படக்கூடாது.

• இன்றைய நவீன உணவுகளாய்க் கருதப்படும் பீஸா, பப்ஸ், ஐஸ்கிரீம் போன்றவைகளுக்கு 144 தடை உத்தரவு போட்டே ஆக வேண்டும்.

• 24 மணி நேரமும் இயற்கைக்குப் புறம்பாய் ஐஸ்வாட்டர், குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதைத் தவிர்த்தல் ரொம்ப உத்தமம்.

• உணவருந்தும் வேளையில் நொறுக்குத் தீனியை உண்ணும் பழக்கத்தைத் தவிர்த்தல் மூலம் கரியாகும் காசை மிச்சப்படுத்தலாம்.

போதை தரும் பீர், பிராந்தி, ஒயின் வகைகளைத் தவிர்த்தல்.

 • டின்களில் அடைத்து விற்கப்படும் உடனடி உணவுகள் (Instant foods), பிஸ்கட்டுகள் போன்றவற்றைத் தவிர்த்தல்.

இதுபோன்ற உணவுவகைகளை அறவே நீக்கலாம் அல்லது அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.

கீழ்கண்ட உணவு வகைகளை நிறைய சேர்த்துக் கொள்ளுவது ஐஸ்வர்யாராய் மாதிரி ஸ்லிம் ஆக உதவும். அவை...

 

மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பருப்புக்கீரை, புதினா, கறிவேப்பிலை, மல்லி இலை போன்ற கீரைவகைகள் நம் உணவில் வந்தனம் கூறி வரவேற்கப்பட வேண்டியவை.

பச்சை சுண்டைக்காய், வெண்டைக்காய், பீட்ரூட், அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, பீர்க்கம் பிஞ்சு, சோயாபீன்ஸ், காராமணிக்காய், முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகள் பச்சைக் கொடி காட்டி ஏற்றுக்கொள்ள வேண்டியவை.

திராட்சை, ஆரஞ்சு, பைன் ஆப்பிள், பப்பாளிப் பழம், மாதுளம்பழம், வெள்ளரிப்பழம் , தர்ப்பூசணி பழம் , சாத்துக்குடி ,எலுமிச்சை போன்ற

பழ வகைகள். இவற்றை கண்டிப்பாகப் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

'இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அப்படியும் உடல் எடை குறையவில்லை?” என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

அதிக உடல் எடையானது, ஒரே நாளில் அல்லது ஒரே மாதத்தில் ஏற்பட்டுவிடுவதில்லை. படிப்படியாகத்தான் உடல் எடை அதிகமாகிறது. அது போலவேதான் அதிக உடல் எடையைப் படிப்படியாகத்தான் குறைக்க முடியும். உடனே குறையவே குறையாது.

ஒரே மாதத்தில் 10 கிலோ முதல் 25 கிலோ வரை உடல் எடையைக் குறைப்பதாகக் கவர்ச்சியாக மாடல் விளம்பரம் தருவார்கள். நாமும் கவர்ச்சி விளம்பரத்தால் உந்தப்பட்டு, மருந்துகள் வாங்கிச் சாப்பிட்டுப் பார்ப்போம். ஆனால் ஒரு கிலோ கூட உடல் எடை குறைவதில்லை.

ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் உணவால் முடியாத காரியம் மருந்தால் முடியாது. ஏனெனில் 'உணவே மருந்து;

மருந்தே உணவு' உடல் பருமனைக் குறைக்க ஆசைப்படுபவர்கள் கீழ்க்கண்டவாறு உணவுப் பழக்கத்தை மாற்றிப் பாருங்கள். கண்டிப்பாக மிகச் சிறந்த பலன் கிடைக்கும்.

 

காலை உணவு

காலை உணவைக் கண்டிப்பாக ஒன்பது மணிக்குள் எடுக்க வேண்டும்.

மணத்தக்காளி - கரிசலாங்கண்ணி - பொன்னாங் கண்ணி - முருங்கைக் கீரை - இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து, தேவையான தண்ணீருடன் கொதிக்கவைத்து, 200 மி.லி அளவில் காலை உணவாகக் கொள்ளவும். இந்தச் சூப்பினால் உடம்பில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிகபட்ச கொழுப்பு கரைந்து, நீராய்ப் பிரியும். இதேபோல் ஆறு முதல் எட்டு மாதங்கள் கடைப்பிடிக்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாட்கள் கீரை சூப் மட்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் காலை உணவாக மாதுளை ஜூஸ் மட்டும் பருகவும்.

 

மதிய உணவு

மதிய உணவைக் கண்டிப்பாகப் பகல் 1.30க்குள் எடுக்க வேண்டும். காலையில் கீரை சூப் மட்டும் அருந்தியிருப்பதால் நல்ல பசியிருக்கும். திருப்தியாகச் சாப்பிடுங்கள். சாப்பாடு - சாம்பார் - ரசம் - சேர்க்கக் கூடிய காய்கறிகள் - கீரைகள் - பழங்கள் அனைத்தும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 

இரவு உணவு

இரவு உணவைக் கண்டிப்பாக 7.30 மணிக்குள் உண்ண வேண்டும். இட்லி - இடியாப்பம் - சப்பாத்தி - இவற்றையே உணவாகக் கொள்ளலாம். அல்லது சேர்க்கக்கூடிய பழங்கள், ஒரு டம்ளர் பால் மட்டும் சாப்பிடலாம். இரவு உணவை முடித்தபின் தண்ணீர் தவிர வேறெதுவும் விடியும் வரை சாப்பிடக் கூடாது.

இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே குறைந்தபட்சம் 12 மணிநேரம் இடைவெளி இருக்க வேண்டும்.

இத்தகைய உணவு வரையறைச் சுழற்சி சரியாக 6 முதல் 8 மாதங்கள் வரை இருந்தாலே, சராசரி உடல் எடைக்குத் திரும்பிவிடலாம். இந்த உணவு முறை சுழற்சியைக் கடைப்பிடிக்கும் பொழுது மிகுந்த களைப்பு உண்டானால், பத்துநாட்களுக்கு ஒருமுறை இயல்பான உணவுமுறையை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து மேற்கொண்டு, மீண்டும் இந்த முறைக்குத் திரும்புங்கள்.

வேர்க்கடலையைக் கொறித்துக் கொண்டு நடைப்பயிற்சியை மேற்கொண்டால் உடல் பருமன் குறையவே குறையாது. எளிதான உடற்பயிற்சியுடன் நான் சொன்ன உணவுமுறை சுழற்சியைப் பழக்கப்படுத்துங்கள். கண்டிப்பாக உடல் எடை குறையும்.

உடல் பருமனுக்கு இயற்கை முறை மருந்துகள், சருமப் பாதுகாப்புக்கு உணவே மருந்து, பெண்களைத் துரத்தும் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு உணவு - இவைகளைப்பற்றிக் காண்போம்.

 

ஆரோக்கிய குறிப்புகள் : நீங்களும் ஐஸ்வர்யாராய் ஆகலாம் - ஆரோக்கிய குறிப்புகள் [ ஆரோக்கியம் ] | Health Tips : You too can become Aishwarya (Beauty) - Health Tips in Tamil [ Health ]


தொடர்புடைய வகை






தொடர்புடைய தலைப்புகள்